குறைந்த அளவிலான பெட்ரோல், டீசல் அளித்துப் பங்கு ஊழியர்கள் செய்யும் மோசடிகளுக்கு விரைவில் கடிவாளம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மத்திய அரசு அதிகாரிகள் பெட்ரோல், டீசல் வநியோகம் செய்யும் தயாரிப்பாளர்களை அழைத்து மின்னணு கடவுச்சொல் கொண்டு சீல் அமைக்கும் முறை குறித்து விவாதித்துள்ளது.
காரணம் என்ன?
உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வழங்கும் இயந்திரங்களில் அதிகப்படியான மோசடி நடந்துள்ளதாக அன்மையில் வந்த அதிகப்படியான புகார் மற்றும் சோதனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை
இந்த இரண்டு மாநிலங்களிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு வந்த புகார்களை வைத்து பெட்ரோல் நிலையங்களில் சோதனை நடத்திய போது திரையில் அதிக அளவிலான பெட்ரோல் அளிக்கப்பட்டுள்ளதாகக் காண்பித்து இயந்திரத்தைத் திருத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
மின்னணு வழியாகச் சீல்
தற்போது இயந்திரத்தில் சீல் செய்யப்பட்டு இருக்கும் முறையினை மாற்றிப் பல்சர் கார்டு உதவியுடன் மின்னணு வழியாகச் சீல் செய்யும் முறையினை அறிமுகம் செய்ய இருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையினைச் சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் ரிப்போர்ட்டர் கேட்டபொழுது தெரிவித்தார்.
தொழில்நுட்பவாதிகளால் திறக்க முடியாது
பல்சர் கார்டு மூலம் எண்ணெய் விநியோகம் செய்யும் இயந்திரத்தினைச் சட்ட அளவியல் துறை சீல் உதவியுடன் பூட்டப்படும். இதனைத் தொழில்நுட்பவாதிகளால் திறக்க முடியாது.
மோசடி எப்படி நடந்துள்ளது
மோசடியில் ஈடுபட்டு பெட்ரோல் நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் சிப்பினால் வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வாங்கும் போது 50 முதல் 70 மில்லி லிட்டர் வரை குறைவாக அளிக்கப்பட்டு வந்துள்ளது.
முதலாளியால் மோசடி செய்ய முடியுமா?
மற்றொரு அதிகாரி நமக்கு அளித்த தகவலின் படி என்ன தான் பல்சர் கார்டு பயன்படுத்தப்பட்டாலும் பேட்ரோல் நிலைய முதலாளியால் மோசடி செய்ய முடியும், எனவே இதனை மாநில சட்ட மயமாக்கல் துறைகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் கூட்டாக மின்னணு சீல் பணியை மேற்கொள்வார்கள் என்றும் எண்ணெய் வழங்கும் பிரிவுக்கு மட்டும் இந்தக் கடவுச்சொல் சீல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
விலை
பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் இதனைப் பொருத்த 50,000 ரூபாய் வரை செலவாகும். இதனால் மாதம் 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான மோசடிகள் தடுக்கப்படும்.
முழுமையான பாதுகாப்பு அல்ல
மின்னணு முறை சீல் ஒரு பாதுகாப்பு முறையே தவிர, முழுமையான பாதுகாப்பு முறை அல்ல என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
துரித பணியில் அமைச்சகம்
எண்ணெய் துறை அமைச்சகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகமும் இணைந்து இதனை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் விரைவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.