மத்திய, மாநில அரசுகள் மத்தியில் பல பிரச்சனைகளுக்கு நடுவில், பல கட்ட ஆலோசனை, சமரச பேச்சுக்குப் பின் ஜிஎஸ்டி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் அறிமுகக் கூட்டத்தை ஒரு விழாபோலக் கொண்டாடி மத்திய அரசு மணியடித்துத் துவக்கி வைத்தது நாம் மறக்க முடியாது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து, எல்லாவிதமான சரக்கு மற்றும் சேவையை ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இதனை மிகப்பெரிய சாதனையாகப் பேசி வரும் தலைவர்கள், மக்களின் நலன் மீது அக்கறை கொண்டார்களா என்பது மக்களுக்கே பெரிய கேள்வியாக உள்ளது..?
முக்கியமான பொருட்கள்
இந்திய வரலாற்றிலேயே முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் ஜிஎஸ்டி, மக்கள் நலனை விடப் பணத்தையும், வருமானத்தையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்பமுடியுமா..?
ஆம், நாம் தினசரி பால் உபயோகிப்பது போல் பயன்படுத்தும் மற்றொரு பொருள் என்றால் எரிபொருள் தான். ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஹைட்ரோகார்பன் பொருட்களான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகியவற்றுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சந்தை..
பெட்ரோல் மற்றும் டீசல் வலையில் 1 ரூபாய் உயர்ந்தாலே, அடுத்த நாள் மக்கள் பயன்படுத்தும் காய்கறி முதல் அனைத்துச் சேவைகளின் விலையும் உயரும் அளவிற்கு இந்த எரிபொருளுக்கு சக்தி உள்ளது.
இத்தகைய முக்கியமான பொருட்களைத் தானே இந்த மாபெரும் புரட்சிகரமான ஜிஎஸ்டி-யில் சேர்த்திருக்க வேண்டும். ஏன் சேர்க்கப்படவில்லை..?
என்ன காரணம்..?
இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் வருவாய் அளவில் சராசரியாக 40 சதவீதம் வருமானம் பெட்ரோலியம் பொருட்களின் மூலம் கிடைக்கிறது. இதனை ஜிஎஸ்டியின் கீழ் சேர்த்து விட்டால் மாநிலங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானம் 50 சதவீதம் குறைந்துவிடும்.
எப்படி..?
ஜிஎஸ்டிக்கு முன் மறைமுக வரிவிதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய கலால் வரியாக 23 சதவீதமும், மாநில மதிப்பு கூட்டி வரி என 34 சதவீதம் என மொத்தம் 57 சதவீதம் வரி இதன் மீது விதிக்கப்படுகிறது.
தற்போது ஜிஎஸ்டி கீழ் அதிகப்படியான வரியே 28 சதவீதம் என்பதால் இதன் மூலம் கிடைக்கும் வரி வருமானம் 50 சதவீதம் பாதிக்கும். இது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றுக்கு மாறுபடும். இதற்கும் 28 சதவீதத்திற்கு அதிகமான வரி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு ஜாக்பாட்..
நகரத்தில் இருக்கும் ஒருவர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 800 -1000 ரூபாய்க்கு (இரு சக்கர வாகனம்) இதுவே 4 சக்கர வாகனமாக இருந்தால் இது 3,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.
இந்தப் பொருட்களை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டு வந்திருந்தால் மக்களின் செலவுகள் பாதியாகக் குறைந்திருக்கும். அதுமட்டும் அல்லாமல் போக்குவரத்தை நம்பியிருக்கும் காய்கறிகள், பஸ் கட்டணம், சரக்குகள் எனப் பல வகையில் மக்களின் பணம் சேமிக்கப்பட்டு இருக்கும்.
இந்த ஒரு விஷயத்தால் பல சேவைகளுக்குத் தற்போது மக்கள் அதிகளவிலான பணத்தைச் செலவு செய்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சில்
5 ஹைட்ரோகார்பன் பொருட்களை ஜிஎஸ்டி வரியமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், மாநிலங்களின் வருமான அளவீடுகள் சரியான பின்பு இதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்போது, எத்தனை மாதத்திற்குள் என எவ்விதமான அறிவிப்பையும் அளிக்கவில்லை.
25,000 கோடி ரூபாய்
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவதன் மூலம் உற்பத்தி, சுத்திகரிப்பு, சந்தைப்படுத்து நிறுவனங்கள் என வருடம் 25,000 கோடி ரூபாய் வருவாய் அளிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.
இதில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அடுத்த ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
தீர்வு
தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி வரியமைப்பு, சரக்கு மற்றும் சேவைக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு பெறுகிறது. மாநில அரசுகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனை வரியை மட்டுமே பெறுகிறது, சேவைக்கான சப்ளை வரியும் மாநிலங்களுக்கு கிடைத்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.
இதன் வாயிலாக எவ்விதமான தடையுமின்றி பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வரலாம்.
அரசும் மக்களும்..
நாட்டில் வர்த்தகச் சந்தையை வரிவாக்கவும், எளிமையாக்கவும், ஒற்றை வரி விதிப்பில் அனைத்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எளிமையான முறையில் எல்லாத் துறை சார்ந்த சேவையும், வரியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த ஜிஎஸ்டி வரி அடிப்படை குறிக்கோளாக இருக்கிறது.
மத்திய அரசின் திட்டத்தின் படி குறுகிய காலகட்டத்தில் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர வேண்டுமெனில் வரி குறைவாக இருக்க வேண்டும் ஆனால் உலகிலேயே அதிக ஜிஎஸ்டி வரி இந்தியாவில் தான் உள்ளது.
வரி விதிப்புகள்
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள படி ஜிஎஸ்டி கீழ் 4 அளவிலான வரி விதிப்புகள் உள்ளது. அது 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவை ஆகும். அதில் 28 சதவீதத்தின் கீழ் இருக்கும் சில பொருட்களுக்குக் கூடுதல் செஸ் வரி இருப்பது குறிப்பிடத்தக்கது.