ஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவன பங்குகள் சுமார் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இந்த சரிவின் காரணமாக 11.30 மணியளவில் மட்டும் ஐடிசி நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான பங்கு மதிப்பை இழந்துள்ளது.
எல்ஜிசி
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி, ஐடிசி நிறுவனத்தின் 16.29 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்நிலையில், ஐடிசி நிறுவனத்தின் 12 சதவீத சரிவால் எல்ஐசி நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பீடு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
ஜூலை 1 முதல் புதிதாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியில், சிகரெட் மீதான வரி பழைய வரி அமைப்பில் இருந்ததை விடவும் குறைவாக இருந்தது.
இதனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு அடுத்த வர்த்தக நாளில் ஐடிசி நிறுவனப் பங்குகளின் மதிப்பு வரலாறு காணாத அளவான 353.20 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.
திங்கட்கிழமை
இந்நிலையில் நாட்டின் சிகரெட் பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக மறைமுக வரி விதிப்பில் சிக்ரெட் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதைப் போல ஜிஎஸ்டியிலும் இதன் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.
5 சதவீத வரி
ஜூலை1ஆம் தேதிக்கு முன் சிகரெட் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட விளம்பர மதிப்பான 5 சதவீத வரி, ஜிஎஸ்டி வரியமைப்பிலும் தொடரும் நிலையில், மேலும் பில்டர் இல்லாத சிகரெட் 65mmக்கு குறைவாக இருக்கும் 1000 சிகரெட் தயாரிப்புக்கு 2,076 ரூபாய் தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டிக்கு முன் இது 1,591 ரூபாயாக இருந்தது. அதேபோல் பில்டர் சிகரெட் 70mmக்கு குறைவாக இருக்கும் 1,000 சிகரெட்க்கு கூடுதலா 621 ரூபாய் விதித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.
ரூ.5,000 கோடி வருமானம்
ஜிஎஸ்டியில் சிகரெச் 28 சதவீத வரி விதிப்பில் உள்ளது, விளம்பர மதிப்பான 5 சதவீத வரி இதன் மீது விதிக்கப்படுகிறது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் மூலம் அரசுக்கு வருடம் 5,000 கோடி ரூபாய்க் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
சரிவின் ஆரம்பம்
இந்த அறிவிப்பின் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்திலேயே ஐடிசி நிறுவனப் பங்குகள் 3.4 சதவீதம் வரை சரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.
45,000 கோடி ரூபாய்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் இந்நிறுவனப் பங்குகள் 329 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 282 ரூபாய் வரை சரிந்தது. இந்தச் சரிவின் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 45,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது.
தொடரும் சரிவு பாதை..
இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருக்கும் ஐடிசி நிறுவனம், அடுத்தச் சில நாட்களுக்கு இதேபோன்ற நிலையில் தான் இருக்கும்.
ஆனால் நீண்ட கால நோக்கில் கண்டிப்பாக ஐடிசி நிறுவனத்தின் வர்த்தகமும், பங்கு மதிப்பும் வளர்ச்சி அடையும்.
முதலீட்டாளர்கள்
ஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்தோர் இழப்பை கண்டு பயப்பட வேண்டாம், அடுத்தச் சில மாதங்களுக்குள் மீண்டும் ஐடிசி பங்கு மதிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும்.
புதிய முதலீட்டாளர்கள் சந்தை நிலையை ஆய்வு செய்து ஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.