இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜியோ நிறுவனத்தினால் ஒவ்வொரு காலாண்டும் 550 கோடி வரை நட்டம் அடைவதாகக் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் முதல் வணிக ரீதியிலான தொலைத்தொடர்பு சேவையினை வழங்கி வருகின்றது. இதனால் போட்டி நிறுவனங்கள் பெறும் பாதிப்பினை சந்தித்து வருகின்றன.
நிமிடத்திற்கு 21 பைசா நட்டம்
சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் 21 பைசா நட்டம் அடைவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் இலவசங்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.
போட்டி தேவை, அகம்பாவம் கூடாது
இந்தியாவில் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி தேவை, தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அகம்பாவம் இருக்கக் கூடாது என்று ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விட்டுக் கொடுப்பதால் அதிக லாபம் அடைய முடியும் என்பது பொய்
மொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை விட்டுக் கொடுப்பதால் அதிக லாபம் அடைய முடியும் என்று ஜியோ கூறுவது தவறு. இந்தக் கட்டணத்தினை நீக்குவதினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விலையைக் குறைத்து பெறும் மோசடியில் ஈடுபடுகின்றது என்று கூறுகின்றனர்.
பிற நிறுவனங்களுக்குச் சுமை
மொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை நீக்க முயல்வதன் மூலமாக ஜியோ தனது செலவுகளைப் பிற போட்டி நிறுவனங்களின் தலையில் போடுகின்றது என்று ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
20,000 கோடி வரை நட்டம்
மொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை நீக்குவதின் மூலம் 15,000 கோடி முதல் 20,000 கோடி வரை தொலைத்தொடர்பு துறைக்கு நட்டம் ஏற்படும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியுள்ளது.