மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையின் கீழ் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரி தாக்கல் செய்வதற்கான தேதிகளை அறிவித்தது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத வரி தாக்கல் செய்வதற்கான தேதிகளை நீட்டித்துள்ளது. அதன் படி ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகிய படிவங்களை விரைவில் வணிகர்கள் தாக்கல் செய்ய வெண்டும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வணிகர்கள் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தின் மூலம் வெளியில் சப்ளை செய்த பொருட்கள் மற்றும் நிறுவனத்திற்கு உள்வந்த பொருட்கள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட சுய மதிப்பீட்டு வரிக் கணக்கை சமர்ப்பிக்க வெண்டும்.
ஜிஎஸ்டி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான தேதிகளினை மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம்(CBEC) இப்போது அறிவித்துள்ளது, அதனை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
ஜிஎஸ்டிஆர்-1
ஜூலை மாதத்திற்கான விற்ற பொருட்கள் விவரங்களை ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தின் மூலம் நிரப்பிச் செப்டம்பர் மாதம் 1 முதல் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவே ஆகஸ்ட் மாதத்திற்கான விவரங்களைச் செப்டம்பர் 16 முதல் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜிஎஸ்டிஆர்-2
ஜூலை மாதத்திற்கான நிறுவனத்தின் கொள்முதல் சார்ந்த விவரங்களைச் சமர்ப்பிக்கப் பயன்படும் ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தினைச் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுவே ஆகஸ்ட் மாதத்திற்குச் செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜிஎஸ்டிஆர்-3
ஜிஎஸ்டிஆர்-3 படிவம் ஒரு மாதத்திற்கான இறுதி வரி தாக்கல் செய்வதற்கான படிவம் ஆகும். இந்தப் படிவத்தில் நிறுவனம் கொள்முதல் செய்த பொருட்கள் மற்றும் விற்ற முதல் போன்றவற்றை வைத்து இறுதி செய்யப்பட்ட வரியினைத் தாக்கல் செய்து வரி செலுத்துவது ஆகும்.
ஜிஎஸ்டிஆர்-3 தாக்கல் செய்வதற்கான தேதிகள்
ஜூலை மாத ஜிஎஸ்டிஆர்-3 படிவத்தினைச் செப்டம்பர் மாதம் 11 முதல் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுவே ஆகஸ்ட் மாதத்திற்குச் செப்டம்பர் 26 முதல் 30 தேதிக்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டிஆர்-3பி
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தினை ஆகஸ்ட் -5ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். கடைசித் தேதி ஆகஸ்ட் 20ம் தேதி ஆகும்.
இதுவே ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தினைச் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி
71.30 லட்சம் கலால் வரி, சேவை வரி மற்றும் வாட் வரி செலுத்துனர்கள் ஜிஎஸ்டிக்கு மாறியுள்ளனர். அதே நேரம் 15 லட்சம் புதிய நபர்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் வணிகம் செய்யப் பதிவு செய்துள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.