இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்குநாள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் இத்தகைய சூழ்நிலையிலும் மாநில அரசுகள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
50 சதவீத வரி...
தற்போது மக்கள் வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் தொகையில் 50 சதவீதம் வரியாக மட்டுமே உள்ளது. இதில் மத்திய அரசின் அதிகப்படியான கலால் வரியின் மீது மாநில அரசுகள் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியவை விதித்து வருகிறது.
சலுகைகள்
இந்நிலையில் பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டிக்குள்ள கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியும் மாநில அரசு தற்போது இருக்கும் வரி விதிப்பில் இருந்து மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி
மத்திய நிதியமைச்சகம், பெட்ரோலிய துறை அமைச்சகத்துடன் தற்போது பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்கு கீழ் சேர்க்க வேண்டும் என்பதற்காக கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
2 மாதம்
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 2 மாதங்கள் முடிந்த நிலையில், மாநில அரசுகளுக்கு தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை களைய போதுமான நேரத்தை அளித்து விட்ட நிலையில், மத்திய நிதியமைச்சம் தற்போது பெட்ரோலிய பொருட்களை முழுமையாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.