ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட முதல் மாதத்தில், வரி செலுத்துவோர் அதிகளவிலான வரிப் பணத்தை (Input Tax Credit) திரும்பக் கோரியதால் மத்திய அரசுக்குக் குறைவான வரி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்தியாவில் மறைமுக வரியில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாற்றப்பட்ட இந்த இடைப்பட்ட காலத்தில் வரி செலுத்துவோர் சுமார் 95,000 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளீடு வரியான Input Tax Creditஐ செலுத்தினர்.
இதில் 65,000 கோடி ரூபாய் திரும்பக் கோரப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு வெறும் 30,000 கோடி ரூபாய் மட்டுமே வரி வருமானமாகப் பெற்றுள்ளது.
உள்ளீடு வரி
உள்ளீடு வரி கடன் என்பது ஒரு உற்பத்தியாளர், தான் வாங்கும் மூலப்பொருட்களுக்கு வரியை முன்கூட்டியே செலுத்தினால், தயாரிக்கப்பட்டுச் சந்தைக்குச் செல்லும் பொருட்களின் மீதான வரியைக் குறைத்துக்கொள்ளலாம். இதனை மத்திய அரசிடம் இருந்து கோர வேண்டும்.
குறைவான வரி வருமானம்
ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளீடு வரி அளவீட்டை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் தற்போது கிடைத்துள்ள வரி வருமானம் மிகவும் குறைவு எனவும், இது சரக்கு மீதான 18 சதவீத வரி கணக்கிட்டால் கூடக் குறைவான வரி வருமானம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
வரி வசூல்
ஜூலை மாதத்தில் 60 லட்ச வரி செலுத்தும் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களில் 70 சதவீதம் பேர் வரியைத் தாக்கல் செய்துள்ளனர். இக்காலகட்டத்தில் மத்திய ஜிஎஸ்டி (CGST) வரி வருவாய் 15,000 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வரி வருவாய் 23,000 கோடி ரூபாயாகவும், இணைக்கப்பட்டட ஜிஎஸ்டி (IGST) வரி வருவாய் 47,000 கோடி ரூபாயாகவும் இருந்தது.
7,000 கோடி ரூபாய்
மேலும் செஸ் வரியின் மூலம் கூடுதலாக 7,000 கோடி ரூபாய் வரியையும் மத்திய அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கால நீட்டிப்பு
ஜிஎஸ்டி நெட்வொர்க் தளத்தில் கோளாறு ஏற்பட்டதன் விளைவாகச் செப்டம்பர் 9ஆம் தேதி வரி தாக்கல் செய்வதற்கான தேதியை ஆக்டோபர் 10ஆம் தேதிக்கு நீட்டிப்பு செய்தது ஜிஎஸ்டி கவுன்சில்.
இதனுடன் ஜிஎஸ்டி கவுன்சில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக இருக்க அடுத்த 4 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் மாதம் வரையில் எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தைத் தாக்கல் செய்ய அனுமதி அளித்ததுள்ளது.
100 கோடி ரூபாய் விற்றுமுதல்
சமீபத்தில் நடத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்தி ஆதியா 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதல்(Turnover) கொண்ட நிறுவனங்கள் ஆக்டோபர் 3ஆம் தேதிக்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எஞ்சியுள்ளவர்கள் அக்டோபர் 10 தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.