இந்திய பொருளாதாரத்தின் சரிவையும், மத்திய அரசின் பொருளாதாகரக் கொள்கைகளையும் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார் பிஜேபி கட்சியின் உயர் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் இந்தியாவின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.
மோடி.. ஜெட்லி..
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையில் இந்திய பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் எனப் பிரதமர் மோடியையும், மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லியும் நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா.
தேசிய கடமை..
இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையையும், இதற்கான காரணமானவர்களையும் பற்றி இப்போது கூட நான் பேசவில்லை என்றால் தேசிய கடமையைத் தவறியதற்கு ஒப்பாகும்.
தற்போதைய நிலைக்கு முழுமுக்கிய காரணம் மத்திய நிதியமைச்சர் தான் என்பது பிஜேபி கட்சியும், அதன் உறுப்பினர்களும் அறிந்த ஒன்று. ஆனால் அதனைப் பற்றிப் பேச அனைவரும் பயப்படுகின்றனர் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
2 குற்றங்கள்
மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்புப் பொருளாதாரப் பேரழிவிற்குக் குறைவற்றது, ஜிஎஸ்டி தவறாகப் புரிந்துகொண்டு, மட்டமாக அமல்படுத்தப்பட்டவை எனச் சின்ஹா கூறியுள்ளார்.
அருண் ஜேட்லி
2014ஆம் தேர்தலுக்கு முன்பு அருண் ஜேட்லி மிகவும் திறமையானவர் என்ற பிம்பத்தைப் பெற்று இருந்தார், அதனாலே 4 முக்கியத் துறைகள் இவரின் கைகளுக்குச் சென்றது எனச் சின்ஹா கூறினார். 4 அமைச்சகத்தில் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம் மட்டும் நிர்மலா சீதராமன் அவர்களிடம் சென்றுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி கடந்த வருடத்தை விடவும் 2 சதவீதம் சரிந்து 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதற்கு முழுமுக்கிய காரணம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியும் தான்.
அதிரடி சோதனை..
சமீபத்தில் வருமான வரித்துறை, அமலாக்க துறை, மற்றும் சிபிஐ நடத்திய சோதனைகள் அனைத்தும் மக்களைப் பதற்றமான சூழ்நிலையில் வைத்துள்ளவே செய்யப்பட்டவையாக நான் பார்க்கிறேன் எனச் சின்ஹா தாக்கியுள்ளது.
விவசாயிகள் கடன்
மேலும் சில வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் கடன் தள்ளுபடி ஒரு பைசாவில் இருந்து சில ரூபாய் வரையிலானதாக மட்டுமே உள்ளது, இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டுள்ளார் சின்ஹா.
உழைப்பு
இதனிடையில் மோடி பேசும்போதும் எப்போதும் நாடு முழுவதும் வறுமை நிலவுகிறது, இதனைத் தீர்க்க அருண் ஜேட்லி கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று பேசுகிறார். ஆனால் சந்தையில் நிலையே வேறுமாறியாக உள்ளது.
இப்படி அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் குவித்துள்ளார், யஷ்வந்த் சின்ஹா.
பொன்னான வாய்ப்பு
இந்தியப் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் ஜெட்லி. கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்தது ஜெட்லி பதவிக்கு வந்தபோது. அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணடித்துவிட்டார்.
முழு உடந்தை
இந்திய பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது. அதற்குப் பணமதிப்பிழப்பு ஒரு முக்கியக் காரணம். மோடியின் இந்தத் தவறான திட்டத்துக்கு அருண் ஜெட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார். ஜிஎஸ்டி வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.