இந்தியாவில் ஒரு துறையில் அதிகப் பணப் புழக்கமும், வரி ஏய்ப்பும் நடக்கிறது என்றால் அது கண்டிப்பாக ரியல் எஸ்டேட் துறையாகத் தான் இருக்க முடியும். இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு அமலாக்கம் செய்த ஜிஎஸ்டி வரியமைப்பிற்குள் ரியல் எஸ்டேட் துறையையும் கொண்டு வர அடுத்த மாதம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலை போல் ஜிஎஸ்டி வரியமைப்பில் ரியல் எஸ்டேட் துறை முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மாற்றங்கள்
கடந்த வாரம் ஜிஎஸ்டி அமைப்பு நடத்திய கூட்டத்தில் பல பொருட்களுக்கான வரியை மாற்றியமைத்தது மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான வரி தாக்கல் முறையைக் கொண்டு வந்தது.
நவம்பர் 9
இப்படி ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் தொடர்ந்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் நவம்பர் 9ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெறும் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையை முழுமையாக ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
மாறுப்பட்ட கருத்து
ஜிஎஸ்டி அமைப்பிற்குள் ரியல் எஸ்டேட் துறையை முழுமையாகக் கொண்டு வர சில மாநிலங்கள் ஒப்புக்கொண்டாலும், பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.
அடுத்த கூட்டம்
ஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கவில்லை என்றால் கூடக் கண்டிப்பாக இதுகுறித்து ஆலோசனை நடக்கும். இதன் மூலம் மத்திய மற்றும் மாநிலங்கள் ஒற்றை முடிவிற்கு வரும் எனத் தெரிகிறது.
ஒரேயொரு வரி
ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரி அமைப்பிற்கீழ் கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர் வாங்கும் வீடு, நிலம் அல்லது வணிகச் சொத்துக்களுக்கு ஒரேயொரு வரி என்ற முறையில் மாற்றம் செய்யப்படும் என நிதியமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதன் மூலம் பலதரப்பட்ட வரி விதிப்புகளில் இருந்து மக்கள் தப்பிக்கலாம்.
12 சதவீத வரி
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் காம்பிளக்ஸ், கட்டிடம், வீடு ஆகியவற்றைக் கட்டினால் அதற்கு நீங்கள் 12 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆனால் நிலம் மற்றும் அசையா சொத்து (முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட) ஆகியவற்றை வாங்கினால் அதற்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது.
வருமான வரி
இதன் மூலம் வருமான வரியின் கீழ் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து மறைக்கப்பட்டு வரும் வரிக்கு உட்பட்ட வருமானத்தை எளிமையாக கண்றிய இது வருமானத்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
கருப்பு பணம்
மேலும் இந்தியாவில் அதளவு கருப்பு பணம் புழங்கும் ஒரு இடம் என்றால் அது, ரியல் எஸ்டேட் துறையாக இருக்கும் பட்சத்தில் புதிய மாற்றத்தின் மூலம் நாட்டில் இருக்கும் கருப்புப் பண ஆசாமிகளை பிடிக்க முடியும் என ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.