டெல்லி:மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியினை மூன்று மாதம் வரை நீட்டித்துப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதனால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கு முன்பு 2017 டிசம்பர் 31 கடைசித் தேதி என்று இருந்ததை மத்திய அரசு நேற்று திரும்பப் பெற்றது. ஆனால் கடைசித் தேதி என்னவென்று அறிவிக்கவில்லை. அதனைச் சற்று நேரத்திற்கு முன்பு 2018 மார்ச் 31 என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண் இணைப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு அனைத்து வங்கி கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறிவந்தது. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆதார் வங்கி கணக்கு இணைப்பு தேவையில்லை என்று தீர்ப்பு வந்தது.
வங்கி கணக்கு - ஆதார் எண் இணைப்பு
பின்னர் மத்திய அரசு கொண்டு வந்த பண மோசடி சட்டத்தின் கீழ் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைப்புக் கட்டாயம் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
பான் - ஆதார் இணைப்பு
சென்ற வாரம் மத்திய அரசு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இனைக்க இருந்த கடைசித் தேதியினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்த நிலையில், தற்போது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியையும் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் செய்யச் செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
பொது விநியோக திட்டங்கள்
பிற சேவைகளுக்கு எல்லாம் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு ஏதும் செய்யவில்லை. எனவே அரசு சமுக நலத்திட்டங்கள் மற்றும் பொது விநியோக திட்டங்களில் எல்லாம் ஆதார் எண் இணைப்பினை 2017 டிசம்பர் 31-க்குள் செய்ய வேண்டும்.
மொபைல் எண்
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பைச் செய்ய இருந்த காலக்கெடு நீட்டிப்பு ஏதும் இன்று செய்யாததால் 2018 மார்ச் 6-ம் தேதிக்குள் இணைக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.