இந்திய தனிநபர் அடையாள ஆணையம் ஊடகங்களில் தனிநபர்களின் ஆதார் விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் விற்கப்படுகிறது என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் பல ஊடகங்களில் 500 ரூபாய் அளித்தால் 10 நிமிடம் வரையில் லட்சம் கணக்கான ஆதார் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று வாட்ஸ்ஆப் மூலம் விற்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.
பத்திரிக்கை செய்தி
திரிபுன் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு விசாரணைக் குழுவானது 500 ரூபாய்க்குக் கோடிக்கணக்கான ஆதார் விவரங்களை மோசடி கும்பல் ஒன்று வாட்ஸ்ஆப்பில் விற்கப்படுவதாக வியாழக்கிழமை செய்தியை வெளியிட்டது.
ஆதார் மென்பொருள்
நடப்பு ஆதார் மென்பொருளானது சந்தையில் 300 ரூபாய்க்குக் கிடைப்பதாகவும், அதனைப் பயன்படுத்தித் தனிநபர்களின் ஆதார் விவரங்களை எளிதாக அச்சிட்டுப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
எப்படி இந்தத் தகவல் திருட்டு நடக்கிறது?
வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் ஆதார் கார்டு சேவை அளிக்கத் துவங்கியதால் 3,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற ஊழியர்களுக்கு வேலை பறிபோனதால் அவர்களின் உதவியுடன் இந்த விவரங்கள் விற்கப்படுவது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
எவ்வளவு ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளது?
இதுபோன்று 1,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னால் ஊழியர்கள் தவறான முறையில் ஆதார் விவரங்களை விற்று வருகின்றனர் என்றும் ஆதார் கார்டுகளை அச்சிட்டு வழங்கி வருவதாகவும் இதில் இருந்து ஆதார் விவரங்கள் பாதுகாப்பானது அல்ல என்பது தெரியவந்துள்ளது என்று செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆதார் இணைப்புகள்
ஏற்கனவே ஆதார் எண்ணை பான் கார்டு, வங்கி கணக்கு, சிறு சேமிப்புத் திட்டங்கள், பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டு என அனைத்து நிதி சேவைகள் மட்டும் இல்லாமல் மொபைல் எண் போன்றவற்றிலும் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்தச் செய்தியானது மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.
ஆதார் ஆணையம் மறுப்பு
இதுகுறித்து இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தினைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தொடர்புகொண்ட போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் பயப்படத் தேவையில்லை என்றும் ஆதார் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.