இந்திய மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றியமைத்த ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றார்போலும், வர்த்தகச் சந்தைக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியிலும், தொடர்ந்து மத்திய அரசும், நிதியமைச்சகம் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் இயங்கி வருகிறது.
இதனை மையமாகக் கொண்டே ஒவ்வொரு ஜிஎஸ்டி அமைப்பின் கூட்டத்திலும் தொடர்ந்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் முறையான மற்றும் முழுமையான திட்டமிடாமல், வர்த்தகச் சந்தையின் பாதிப்புகளைச் சரியான முறையில் கணிக்காமல் ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்ததே இந்தத் தொடர் மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஜிஎஸ்டி அமைப்பின் 25வது கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்திலும் பல்வேறு வரி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி மாற்றம்..
ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி அமைப்பு நடத்தும் முக்கியமான கூட்டத்தில் பல பொருட்களின் மீதான வரி விதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்படும் மாற்றங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையின் அடித்தளமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிக்கை
கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார நிலையும், வர்த்தகச் சூழ்நிலையிலும், வேலைவாய்ப்பு சந்தையும் மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்தது. இதற்குக் காரணமாக ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றைக் கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு தொடர்ந்து இத்திட்டங்களை வெற்றி திட்டங்களாகவே கூறி வருகிறது.
ஆனால் உண்மையை உணர்ந்த அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையை மக்களுக்கும், வர்த்தகச் சந்தைக்கும் சாதகமானதாக மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிக் குறைப்புகள்
இன்று நடைபெறும் ஜிஎஸ்டி அமைப்பின் 25வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதில் முக்கியமாக
ஆன்லைன் சேவைகள் மீதான சேவை வரியை 18 சதவீதம் வரையில் குறைக்க உள்ளது. இதேபோல் பயோ டீசலுக்கு 18 சதவீதம் வரையில் குறைக்கவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இதனைத் தாண்டி விவசாய உபகரணங்களுக்கு 12 சதவீதமும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 12 சதவீதமும், கைவினை பொருட்களுக்கான சேவை வரி 12 சதவீதமாகவும், இன்னும் சில சேவைகளுக்கு 18 சதவீதம் வரையில் வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்
இன்றைய கூட்டத்தில் மட்டும் சுமார் 70 மாற்றங்கள் கொண்டு வரப்போகிறது ஜிஎஸ்டி கவுன்சில், இந்த 70 மாற்றங்களும் ஜிஎஸ்டி வரி சார்ந்த சட்டம், விதிகள் மற்றும் செயல்முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிகிறது.
இதில் முக்கியமாக,
1. சப்ளை என்பதற்கான விளக்கத்தை மாற்றியமைக்க உள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்
2. இன்புட் டாக்ஸ் கிரெடிட் முறையில் கூடுதல் தாராளமயமாக்கப்பட உள்ளது.
3. ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தை எளிமைப்படுத்துதல்
4. சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒற்றை முறை பதிவு முறையைக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட உள்ளது.
கைவினை பொருட்கள்
இந்தியாவில் கைவினை பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது மட்டுமல்லாமல் இந்திய கைவினை பொருட்களுக்கு வெளிநாட்டிலும் இதனை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம், ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு இத்துறை மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.
இன்றைய கூட்டத்தில் கைவினை பொருட்கள் தயாரிப்பு துறையை மையமாக வைத்து பல்வேறு அறிவிப்புகள், வரித் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ரியல் எஸ்டேட்
மேலும் துவண்டு போன இந்திய ரியல் எஸ்டேட் துறையை மீட்டு எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்காகப் பிரத்தியேக ஆலோசனையும் இன்று நடக்க உள்ளது.