மோடி அரசு நேற்று வெளியிட்ட 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களை மட்டும் அல்ல முதலீட்டாளர்களையும் மகிழ்விக்கவில்லை என்பதை உணர்த்த இன்றைய வர்த்தகச் சந்தையே முக்கியமான சாட்சியாக விளங்குகிறது.
இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 830 புள்ளிகளை வரையில் சரிந்துள்ளது. இன்றைய சரிவிற்கு முக்கியக் காரணம்?
முக்கியக் காரணங்கள்
1. பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரி long term capital gains (LTCG) வரி.
2. 2019ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையின் அளவு முன்பு 3 சதவீதமாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது 3.3 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.
3. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் MSF விகிதத்தை உயர்த்தும் என அறியப்படுகிறது.
4. பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் சந்தையில் பல்வேறு குழப்பத்தை உருவாக்கி வருகிறது. முக்கியமாக நிலையான கழிப்பு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி பற்றியது.
5. ஜப்பானின் பாங்க் ஆஃப் ஜப்பான் அதிகளவிலான பத்திரங்களைச் சிறப்புப் பிரிவின் கீழ் வாங்கியது. இதனால் ஆசிய சந்தை சரிவைச் சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
இந்தப் பாதிப்புகளால் இன்று காலை முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர், இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையில் சரிந்தது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவை மட்டுமே கண்டது, இன்றைய வர்த்தகத்தில் சென்செகஸ் குறியீடு அதிகப்படியாக 880 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 839.91 புள்ளிகள் சரிந்து 35,066.75 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் சரிவில் இன்று அதிகப்படியாக 275 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 275.40 புள்ளிகள் சரிந்து 10,741.50 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கியமான நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ்&பி குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்களில் டிசிஎஸ், விப்ரோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே லாபத்தைப் பெற்று இருந்தது.
மீதமுள்ள அனைத்து நிறுவனங்களும் சரிவை மட்டுமே சந்தித்தது.
கணிப்புகள்
மும்பை பங்குச்சந்தையில் அடுத்த ஒரு வார காலத்திற்கு சரிவடையும் சூழ்நிலை இருக்கும் எனவும், இந்த சரிவில் சென்செக்ஸ் சுமார் 3000 புள்ளிகள் வரையில் இழக்கும் எனழும் கணிக்கப்பட்டுள்ளது.