மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தபோது திருப்பி அளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆர்பிஐ வங்கிக்குத் திரும்பவந்து 15 மாதங்களாகத் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்தும் முழுமையாகப் பணிகள் முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியானது விரைவான முறையில் தான் நடைபெற்று வருகிறது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏன் இந்த எண்ணிக்கை?
ரூபாய் நோட்டுகள் எவ்வளவு திரும்ப வந்துள்ளது என்று ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சரியான துல்லிய விவரங்களை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரூபாய் நோட்டு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமையாக எண்ணப்பட்ட பிறகு தகவல்கள் அளிக்கப்படும் என்று ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ளனர்.
திரும்ப வந்துள்ள பணத்தின் மதிப்பு எவ்வளவு?
பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வங்கிகள் மூலமாக ரொக்க பணத்தினை 2017 ஜூன் 30 வரை திருப்பி அளிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 2017 ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தேவைப்படும் நாட்கள் எவ்வளவு?
எவ்வளவு நாட்களில் எண்ணும் பணிகள் முடிக்கப்படும் என்ற கேள்விக்கு விரைவாகப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 59 இயந்திரங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ஆர்பிஐ எங்குப் பணிகள் நடைபெறுகிறது, துல்லியமாகப் பணிகள் எப்போது முடியும் என்ற விவரங்களை அளிக்கவில்லை.
கூடுதல் இயந்திரங்கள்
அதுமட்டும் இல்லாமல் வங்கிகளிடம் இருந்து 8 சிவிபிஎஸ் இயந்திரங்களைப் பெற்றும், 7 இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பண மதிப்பு நீக்கம்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி மத்திய அரசு திடீர் என்று 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் செல்லாது என்று அறிவித்தது. 99 சதவீதத்திற்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்து இருந்தது.
15.44 லட்சம் கோடி ரூபாயில் 16,050 கோடி பழைய ரூபாய் நொட்டுகள் மட்டும் தான் திரும்பப் பெறவில்லை என்று மத்திய வங்கி அறிவித்தது.