இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு உருவாக்கிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான நிதி உட்செலுத்தப்பட்டாலும், இதன் மூலம் நலன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்கள் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மறுசீரமைப்புச் செய்து பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5.75 கோடி பேர், அதே 2017-18ஆம் நிதியாண்டில் இதன் அளவு 4.79 கோடி பேர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதன் எண்ணிக்கை சுமார் 17 சதவீதம் குறைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடன்
இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் 2017-18ஆம் நிதியாண்டில் 3.5 கோடி பேர் காப்பீடு பெற்றுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 4.4 கோடியாக உள்ளது.
அதேபோல் காப்பீடு கடன் பெறாத விவசாயிகள் எண்ணிக்கை 1.4 கோடியில் இருந்து 1.3 கோடியாகக் குறைந்துள்ளது.
பருவமழை
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பருவமழை அதிகமாக இல்லையென்றாலும் போதுமான அளவிற்கு இருந்தது. அப்படி இருக்கும்போது விவசாயிகள் அதிகளவிலான காப்பீடுகளைப் பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் இங்குக் காப்பீடு பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 17 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
பிரீமியம்
அதேபோல் விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்யப்படும் பிரீமியம் தொகை 2017-18ஆம் ஆண்டில் சுமார் 9.8 சதவீதம் வரையில் அதிகரித்து 24,352 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விவசாயிகள்
மேலும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் காப்பீட்டில் 40 சதவீத பீரிமியம் தொகையை மாநில அரசு செலுத்த வேண்டியுள்ளது. மாநில அரசுகள் சரியான நேரத்தில் செலுத்தாத காரணத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோல்வி
சமீபத்தில் Indian Council for Research on International Economic Relations அமைப்பு செய்த ஆய்வில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் இழப்பிற்கு அளிக்கப்படும் தொகை விநியோகத்தில் காலதாமதம், காப்பீட்டு நிறுவனங்கள் அதிகத் தொகையைப் பிரீமியம் ஆக வசூலிப்பது, இத்திட்டம் முறையான வகையில் சரியான வழியில் இயங்குகிறதா என்பதைக் கவனிக்க அரசு அதிகாரிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மோடி அரசின் இந்தத் திட்டமும் தோல்வியில் முடிய உள்ளது பல கணிப்புகள் கூறுகிறது.
நிதி ஒதுக்கீடு
மேலும் பிப்ரவரி 2018-19 நிதியாண்டு காலத்திற்குப் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காகச் சுமார் 13,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
முழுமையான தொகை
மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு மட்டும் சென்று அடைகிறதா என்பதும் இந்த எண்ணிக்கை சரிவின் மூலம் சந்தேகம் எழுகிறது.