பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பூ பந்து வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் பேட்மின்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோன் உட்படப் பல அரசியல்வாதிகள் மற்றும் பிஸ்னஸ் மேன்களிடம் இருந்து கோடி கணக்கில் மோசடி செய்துள்ளது.
விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனமானது சினிமா, விளையாட்டு, அரசியல் மற்றும் பிஸ்னஸ் எனப் பல துறை சார்ந்த பிரபலங்களிடம் இருந்து கோடி கணக்கில் பணத்தினைப் பெற்று 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகப் பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளது.
முக்கியக் குற்றவாளிகள்
பெங்களூரு காவல் துறை இந்த வழக்கு தொடர்பாக விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் முதலாளி ராகவேந்திரா ஸ்ரீநாத் அவரது ஏஜண்ட் சுற்றம் சுரேஷ், நரசிம்மமூர்த்தி, கே. சி. நாகராஜ் மற்றும் பிரஹலாத் உள்ளிட்டோரைக் கைது செய்து 14 நாட்கள் வரை விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது.
சுற்றம் சுரேஷ்
சுற்றம் சுரேஷ் என்பவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் ஆவார். இவர் உதவியுடன் பல விளையாட்டு வீரர்கள் விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறப்படவில்லை மற்றும் முதலீட்டு அளவு என்ற தகவலும் தெரியவில்லை.
விசாரணை
காவல் துறை நடத்தி வரும் விசாரணையில் முதலீட்டாளர்கள் பெயர் மற்றும் நிறுவனத்தின் வங்கி கணக்கு போன்ற விவரங்களைப் பெற்றுள்ளதாகவும் 40 சதவீதம் வரை லாபம் அளிப்பதாக ஆசை காட்டி முதலீட்டினை இவர்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ராகவேந்திரா
இந்த மோசடியின் முக்கிய நபர் ராகவேந்திரா என்ற பொறியாளர் என்றும் யஹ்வந்த்பூரில் விக்ரம் இன்வஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தினை இவர் துவங்கி அதில் முகவர்களாக ஆட்களைச் சேர்த்து நல்ல வருமானம் கிடைக்கும் என்று மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிராவிட் & சாய்னா
டிராவிட், சாய்னா, படுகோன் ஆகியோர் இதுவரை இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், விசாரணையில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மூவர் மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் புகார்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.