பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரச 2017 ஜூலை 1ஆம் தேதி, நாட்டில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்த மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அறிமுகப்படுத்தியது.
இதன் பின் அறிவிக்கப்பட்ட தொடர் மாற்றங்கள், வர்த்தகப் பாதிப்பு, பொருளாதாரச் சரிவு, வரி வருவாய் தொய்வு எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்தோம். இந்நிலையில் உலக வங்கி ஜிஎஸ்டி குறித்து முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
115 நாடுகள்
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகளைப் போலவே மறைமுக வரி விதிப்பாகச் சுமார் 115 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதில் அதிகப்படியான வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் ஆய்வு கூறியுள்ளது.
கடினமான வரி விதிப்பு
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது அமலாக்கம் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 115 நாடுகளை ஒப்பீடுகளில் மிகவும் கடினமாகவும் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு 5 படிகளாக உள்ளது. அவை 0, 5%, 12%, 18%, மற்றும் 28% ஆகும். இதில் 0 சதவீதத்தில் இருக்கும் பொருட்களை வர்த்தகம் செய்யும் ஏற்றுமதியாளர்கள் இன்புட் டாக்ஸ் மூலம் வரியைத் திரும்பப் பெறலாம்.
முக்கியமான பொருட்கள்
ஜிஎஸ்டி இல்லாமல் தங்கம் மீது 3 சதவீத வரியும், வைரம் மற்றும் இதர ரத்தினங்கள் மீதும் 0.25 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. மேலும் மதுபானம், பெட்ரோலிய பொருட்கள்ஷ ரியல் எஸ்டேட் மீதான பத்திரகட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றின் மீது மாநில அரசுகள் வரி விதித்து வருகிறது.
இந்தியாவின் மோசமான நிலையில்
உலக வங்கி செய்த ஆய்வில் 49 நாடுகள் ஒற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பையும், 28 நாடுகள் இரண்சு ஜிஎஸ்டி வரி விதிப்பையும் கொண்டுள்ளது. இந்திய உட்பட 5 நாடுகள் மட்டுமே 0% இல்லாமல் கூடுதலாக 4 வரி விதிப்புகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இவை இத்தாலி, லக்ஸம்பர்க், பாகிஸ்தான் மற்றும் கானா ஆகியவை ஆகும்.
வாக்குறுதி
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் 12 மற்றும் 18 சதவீத வரி விதிப்பை இணைத்து ஒற்றை வரி விதிப்பாக அறிவிக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்கள் மற்றும் வர்த்தகச் சந்தையின் எதிர்ப்புகளின் காரணமாகச் சில வாரங்களுக்கு முன்பு 28 சதவீத வரி விதிப்பில் இருந்த 228 பொருட்களை 50ஆகக் குறைந்தார்.
உலக வங்கி
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட காலத்தில் மக்கள் மற்றும் வர்த்தகச் சந்தையில் பல குழப்பங்கள் நிலவியது, இதுமட்டும் அல்லாமல் வரி கணக்கீட்டு முறையிலும் வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ப்தி அதிகமாக இருந்தது என ஜிஎஸ்டி குறியீடு உலக வங்கி தெரிவித்துள்ளது.
நீண்ட கால நோக்கம்
இந்த ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ஆரம்பகட்டத்தில் சில மாதங்களுக்குப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பாதிப்பை உருவாக்கினாலும், நீண்ட கால அடிப்படையில் நன்மை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது உலக வங்கி.