இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 'பில் இல்லையா? உணவு இலவசம்' என்ற புதிய கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவிற்குப் பில் அளித்தால் மட்டும் பணம் அளிக்கலாம் என்றும் இல்லை என்றால் இலவசமாக சாப்பிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பு அனைத்து ரயில்களிலும் உடனடியாக நிறுவ வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புகார்கள்
ரயில்களில் வாங்கும் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரயில்வே அமைச்சகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்ததை அடுத்து அதனைக் குறைக்க என்ன செய்வது என்று இந்தப் புதிய கொள்கையினை அறிவித்துள்ளனர். இதனால் ரயில் பயணிகள் அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்குவது இனி இருக்காது என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணிகளுக்கு அளிக்கப்படும் பில்லில் அதிக விலை குறிப்பிட்டு இருந்தால் அதனை அத்தாட்சியாகப் பயன்படுத்திக் கேட்டரிங் சேவை வழங்குநர் மீது புகார் தெரிவிக்கவும் எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
சாதாப்தி போன்ற ஏசி ரயில்கள்
சாதாப்தி போன்ற ஏசி ரயில்களில் உணவுக்குச் சேர்த்து டிக்கெட் கட்டணத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். பிற ரயில்களில் மட்டும் தான் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்று வருவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விளம்பரப் பலகைகள்
‘பில் இல்லையா? உணவு இலவசம்' என்பது பொன்ற விளம்பரப் பலகைகள் அனைத்து ரயில்களிலும் மார்ச் 31-ம் தேதிக்குள் நிறுவ வேண்டும் என்று அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி இணையதள டிக்கெட்களில் இனி ‘பில் இல்லையா? உணவு இலவசம்' என்ற வாசகமும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பகுதிகளில் அச்சிடப்பட உள்ளது.
ஆய்வுக் குழு
புதிய விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தனிக் குழுவை அமைக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பில் புக் தட்டுப்பாடு
ஒருவேலை உணவு வழங்கப்படும்போது பில் புக் தட்டுப்பாடு என்று கூறினாலும் பயண நேரம் அல்லது உணவு சேவை வழங்கும் நேரம் முடிவடைவதற்குள் பில் அளித்தால் மட்டும் பணத்தினை அளிக்கவும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.