நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்ற காங்கிரஸ் ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை பல்வேறு தடைகள், போராட்டங்களைத் தாண்டி, மோடி தலைமையிலான அரசு சில முக்கிய மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது.
இது நாட்டின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என அனைவராலும் நம்பப்பட்ட நிலையில், வியாபாரிகளுக்கும், அரசுக்கும் பெரிய அளவிலான ஏமாற்றம் கிடைத்தது.
வரி தாக்கல்
வியாபாரிகளுக்கும், வர்த்தகம் செய்வோருக்கும் வரி தாக்கல் செய்வதில் பெரிய அளவிலான பிரச்சனை ஏற்பட்டது, அதுமட்டும் அல்லாமல் சிறு சிறு வர்த்தகர்களுக்கு வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். இதனால் வகைப்படுத்தாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் பாதித்தது.
மாறுபட்ட கருத்து..
ஆனால் ஜிஎஸ்டிக்குப் பின் வர்த்தகர்களின் நிலையில் பற்றிய கருத்துகள் மாறுபட்டதாகவே நிலவும் நிலையில், தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேரடியாக மக்களிடம் இதைக் கேள்வியாகக் கொண்டு சென்று வாக்கெடுப்பு நடத்தியது.
வாக்கெடுப்பு
இந்த வாக்கெடுப்பில் சுமார் 1,600க்கும் அதிகமான வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர், இதில் கிடைத்த தகவல்கள் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ததில் இந்தியாவில் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கியுள்ளது.
சூப்பரா இருக்கு..
மத்திய அரசு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த பின்பு எனது வர்த்தகம் சூப்பரா இருக்கு என மொத்த வாக்கெடுப்பில் 9 சதவீதம் பேர் (151 பேர்) வாக்களித்துள்ளனர்.
அதேபோல் ஜிஎஸ்டிக்குப் பின் ஏனோதானோன்னு போகுது என்று 16 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ரொம்ப மோசம்
அதேபோல் ஜிஎஸ்டி வந்த பின்பு 43 சதவீதம் பேர் தங்களது வர்த்தகம் ரொம்ப மோசமான நிலையை அடைந்துள்ளது எனச் சுமார் 694 பேர் வாக்களித்து உள்ளனர்.
மூடிவிட்டோம்
கடைசியாகச் சுமார் 31 சதவீதம் பேர் ஜிஎஸ்டியால் பிசினஸை மூடிவிட்டோம் எனத் தெரிவித்து அதிர்ச்சியை அளித்துள்ளனர்.