சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக ஏப்ரல் மாதம் 1,03,458 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
2018 ஏப்ரல் மாதம் மொத்தமாக 1,03,458 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ஜிஎஸ்டி ஆக 18,652 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி ஆக 25,7047 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி ஆக 50,548 கோடி ரூபாயும், செஸ் ஆக 8,554 கோடி ரூபாயும் வரி வருவாயினைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைல்கல்
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதனை மிகப் பெரிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் லட்சம் கோடியை கடந்துள்ளது பொருளாதாரச் செயல்பாடுகள் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது என்றும் அருண் ஜேட்லி டிவிட் செய்துள்ளார்.
வருவாய்
செட்டில்மெண்ட் செய்த பிறகு ஏப்ரல் மாதம் பெற்றுள்ள வருவாயானது மத்திய ஜிஎஸ்டி-ல் 32,493 கோடி, மாநில ஜிஎஸ்டி 40,257 கோடி. ஏப்ரல் மாதம் 69.5 சதவீத நபர்கள் வரி செலுத்துபவர்களாக இருந்துள்ளனர்.
வரி தாக்கல் எண்ணிக்கை
மார்ச் மாதம் ஜிஎஸ்டிஆர் 3பி-ஐ 60.47 லட்சம் நபர்கள் தாக்கல் செய்த நிலையில் ஏப்ரல் மாதம் 87.12 லட்சம் நபர்கள் தாக்கல் செய்துள்ளனர் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல பொருள் விற்பனையாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய காலாண்டு கணக்கிற்கான கெடு ஏப்ரல் மாதமாகும். 19.31 லட்சம் விற்பனையாளர்களின் ஜிஎஸ்டிஆர் 4 படிவம் மூலம் காலாண்டுக்கான கணக்குகளை 11.47 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இது 59.40 சதவீதமாகும். இதன் மூலம் பெறப்பட்ட வரி ரூ.579 கோடி ஆகும். இது ஒட்டுமொத்த ஜிஎஸ்டிவரி வசூல் தொகையான 1.03 லட்சம் கோடியில் அடங்கும்.
பொருளாதாரத்தில் மேம்பாடு
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள உயர்வு பொருளாதாரத்தில் மேம்பாட்டைப் பிரதிபலிக்கும். இருப்பினும் நிதி ஆண்டின் கடைசி மாதத்தில் வழக்கமாக மக்கள் தங்களது நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் அதனால் இந்த மாத வரி வசூலை வருங்காலத்திற்கான போக்காகக் கருதமுடியாது.