நாடு முழுவதும் உள்ள பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட பயனாளிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தவர்களுடன், காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி வரும் பிரதமர், 2வது முறையாகத் தற்போது முத்ரா பயனாளிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
பயனாளிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், முத்ரா திட்டம், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது என்றார். மேலும், இந்தத் திட்டம், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பிடியிலிருந்து தொழில்முனைவோரை விடுவிக்க உதவி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாகத் தொழில் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த விரும்பிய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இத்திட்டம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், அரசு இதுவரை ரூ.5.75 லட்சம் கோடி மதிப்பிலான 12 கோடி கடன்களை வழங்கியிருக்கிறது. இதில், 28% அளவு, அதாவது ரூ.3.25 லட்சம் கோடி, முதன்முறையாகத் தொழில் தொடங்குவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கடன் உதவியைப் பெற்ற மொத்தப் பயனாளிகளில் 74% பேர் பெண்களாவர். 55% கடன்கள், எஸ் சி / எஸ் டி மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டப்பயனாளிகளிடம் உரையாற்றிய பிரதமர், இந்தத் திட்டம் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம், மக்களைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மேம்படுத்த உதவியிருப்பதுடன், மக்கள் வெற்றியடைவதற்கும் ஒரு வாய்ப்பை இத்திட்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுய வேலைவாய்ப்பு
சுய வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், சுய வேலைவாய்ப்பு என்பது, தற்போது கவுரவமான ஒன்றாக இருப்பதுடன், இதுவரை முடியாது என்று கருதியிருந்த ஒன்றில் சாதனைப் படைக்கவும், உதவியிருப்பதாகத் தெரிவித்தார்.
குடிபெயர்வதைத் தடுத்திருக்கலாம்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க உதவிக்கரமாக இருந்திருப்பதோடு, மக்கள் பெருமளவில் குடிபெயர்வதையும் தடுத்திருக்க முடியும் என்றும் இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.
எதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சுய தொழில் தொடங்கவும் அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எந்த அளவிற்கு உதவிக்கரமாக இருந்தது என்பதை இந்தக் கலந்துரையாடலின் போது பயனாளிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் 2015 ஏப்ரல் 8 அன்று, பிரதமரால் தொடங்கப்பட்டு, நிறுவனம் சாராதவர்கள், விவசாயம் சாராத சிறு /குறு தொழில் நிறுவனங்களுக்கும், ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்கள் அனைத்தும், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் முத்ரா கடன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் கடன் தொகை, வர்த்தக வங்கிகள், கிராமிய வங்கிகள், சிறு நிதியுதவி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், குறு நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர் கட்சிகள்
இது போன்ற திட்டங்கள் மோடி அரசு ஆட்சிக்கு வரும் முன்பில் இருந்தே இருப்பதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.