சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. சரக்கு மற்றும் சேவை வரியை எளிமையாக்கி ஒரு நாடு ஒரே வரி எனும் திட்டமாக இந்தியாவின் மிகப் பெரிய வரி சீர்திருத்தமாக அமைந்தது.
மத்திய மற்றும் மாநில மறைமுக வரிகளான வாட், மத்திய கலால் வரி, கொள்முதல் வரி, நுழைவு வரி போன்றவை எல்லாம் ஜிஎஸ்டி கீழ் வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 4 ஆண்டுச் சாதனைகளில் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடப்படும் நிலையில் இதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன என்பது பற்றி வருவாய் துறை டிவிட் மூலம் தெரிவித்துள்ளது. அதனை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
எளிமையான வணிகம்
வருவாய் துறையினைப் பொறுத்தவரையில் சுய வரி செலுத்துனர்களுக்கு ஜிஎஸ்டி நன்மைகளை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி கீழ் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை டெர்ன்ஓவர் செய்யும் வனிகளுக்கு வரி விலக்கு உண்டு. மேலும் தேசிய சந்தையில் ஒரே மாதிரியாக வணிகத்தினை எளிமையாகச் செய்ய ஜிஎஸ்டி உதவியது என்றும் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் சரிவு
பல அடுக்கான வரி முறை குறைந்து ஒரே வரியானதால் பல பொருட்களின் விலை குறைந்ததாகவும், அதனால் பணவீக்கம் சரிந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணம் பரிவர்த்தனை குறைப்பு
ஜிஎஸ்டி வெளிப்படையான வரி முறை என்பதால் வணிகங்களில் கருப்புப் பணம் பரிவர்த்தனை குறைந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியாவிற்கு ஊக்கம்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஐஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் உள்நாட்டுத் தொழிற்துறை பாதுகாக்கப்பட்டுள்ளது. சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது 15 சதவீத வரி விதித்து வந்த நிலையில் அவற்றுக்கு 0 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஏழை மாநிலங்களுக்கு நன்மைகள்
மத்திய விற்பனை வரி நீக்கம் மற்றும் இலக்கு அடிப்படையிலான வரி என்பதால் வணிக வருவாய் அதிகம் இல்லாத ஏழை மாநிலங்கள் அதிகம் பயன்பெற்றுள்ளன.
வரிச் சீர்திருத்தம்
எளிமையாக்கப்பட்ட வரிச் சீர்திருத்தம் மற்றும் பல அடுக்கு வரிகள் குறைப்பு போன்றவற்றால் அதிக நுகர்வோர்கள் வரி செலுத்த துவங்கியுள்ளனர்.