உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் வர்த்தகம் செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதிலும் இந்திய வர்த்தகச் சந்தையைப் பிடிக்க எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் தயாராக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஐகியா சந்திக்கும் பிரச்சனை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
இதனால் புதிய ஐடியாவை மையமாக வைத்து இந்தியாவில் ஐகியா இயங்கத் திட்டமிட்டுள்ளது.
ஐகியா
இந்நிறுவனத்தின் பர்னிச்சர்கள் உலகம் முழுவதும் பிரபலம், இதற்கு முக்கியக் காரணம், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் ரெடி டு அசம்பிள் வகையில் இருப்பது தான். இப்போது வேண்டுமானும் அகற்றி சிறிய பெட்டிக்குள் மொத்த பர்னிச்சரையும் அடக்கிக்கொள்ள முடியும்.
இதனாலேயே வெளிநாடுகளில் இந்நிறுவனத்திற்கு மவுசு அதிகம்.
இந்தியா
ஆனால் இந்தியாவில் பர்னிச்சர் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவும், அதுவும் பிராண்ட் பர்னிச்சர்க்கு சொல்லும்படியான வர்த்தகச் சந்தை இல்லை. இத்தகையைச் சூழ்நிலையில் ஐகியா இந்தியாவில் தனது பர்னிச்சர் வர்த்தகத்தைத் துவங்கினால் அவ்வளவு தான்.
பிற வர்த்தகம்
ஐகியா பர்னிச்சர் மட்டும் அல்லாமல் இன்னும் சில வர்த்தகத்திலும் உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில் 5-10 சதவீதம் வருமானம் இந்நிறுவனத்தின் உணவக பிரிவில் இருந்து பெறுகிறது ஐகியா.
இதுதான் டார்கெட்
இந்தியாவில் நுகர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் தனது உணவு வர்த்தகத்தின் மூலம் ஐகியா இந்திய சந்தையை அடையத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் பேட்ரிக் முக்கியமான கருத்தை கூறியுள்ளார்.
ஐகியா இந்தியா
இந்தியாவில் பர்னிச்சர் வாங்குபவர்களின் எண்ணிக்கையை விடவும் வெளியில் கடைகளில் உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதேபோல் பர்னிச்சர்-களில் கிடைக்கும் வருமானம் மற்றும் லாபம் உணவில் கிடைக்காது என்றும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால் மக்களை ஈர்க்கவும், வாடிக்கையாளர்களைப் பெறவும் உணவு துறையை மையமாக வைத்துத் துவங்குவது சிறந்த முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் எனப் பேட்ரிக் கூறியுள்ளார்.
முதல் கடை
இந்நிலையில் ஹைதராபாத் நகரில் ஐகியா துவங்க உள்ள 4,00,000 சதுரடி இந்தியாவின் முதல் கடையில் 1,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் பெரிய அளவிலான உணவகத்தை அமைக்க உள்ளது ஐகியா.
இதன் மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய உணவகத்தை ஐகியா அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரீடைலர்கள்
இந்தியாவில் அதிகளவிலான ரீடைலர்கள் உணவகம், பார், கேப், புட் கோர்டு என உணவு துறையைச் சார்ந்தே உள்ளனர். இந்தியாவில் உணவகத்தின் வர்த்தகச் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.
ஐகியா வருவாய்
ஐகியா தனது உலகளாவிய வர்த்தகத்தில் 2016ஆம் ஆண்டுப் பெற்ற 36.5 பில்லியன் டாலர் வருவாயில் 1.8 பில்லியன் டாலர் உணவு பிரிவில் இருந்து பெற்றுள்ளது.
பீப் மற்றும் பன்றி கறி
இந்தியாவில் ஐகியா சிக்கனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பீப் மற்றும் பன்றி கறிக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாட்டை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்குச் செம் எண்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது.
இலக்கு
2025ஆம் ஆண்டிற்குள் ஐகியா இந்தியாவில் சுமார் 25 கடைகளைத் திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது, இதில் ஒவ்வொரு கடையும் 4 புட்பால் மைதானத்தின் அளவிற்கு இணையாக இருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டுள்ளது.
வர்த்தகத்தை மாற்றிய ஐகியா
பொதுவாக ஒரு தொழிலதிபர் தான் செய்யும் வர்த்தகத்திற்குப் புதிய இடத்தில் தேவை இருந்தால் மட்டுமே விரிவாக்கம் செய்வார், ஆனால் ஐகியா நிறுவனம் தனது ஆஸ்தான பர்னிச்சர் வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தாமல் உணவு வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தனது பர்னிச்சரை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களையும், நுகர்வோர் சந்தையும் கைப்பற்ற வேண்டும் என் ஐகியா மிகப்பெரிய வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது.