2017-2018 நிதி ஆண்டில் ரயில்களில் தரம் இல்லாமல் உணவு வழங்கிது, அதிகத் தொகை வசூலித்தது போன்ற காரணங்களுக்காக 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் உரிமத்தினை இந்தியன் ரயிவேஸ் இரத்து செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2017-2018 நிதி ஆண்டில் ரயில் பயணங்களின் போது டாய்லெட் நீரினை கலந்து டீ, காபி விற்கப்பட்டதாகச் சமுக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
ஆதாரங்கள் கிடைக்கவில்லை ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது
இது போன்ற நிகழ்வுகள் குறித்து ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கான சரியான ஆதாரங்கள் ரயில்வே அமைச்சகத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் ஆனால் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கேட்டரிங் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேட்டரிங் ஒப்பந்ததார்கள் நீக்கம் மற்றும் அபராதம்
2017-2018 நிதி ஆண்டில் 16 கேட்டரிங் ஒப்பந்ததார்கள் நீக்கப்பட்டதாகவும், சரியான முறையில் கேட்டரிங் சேவை வழங்காதது, தரமான உணவு வழங்காதது மற்றும் சுத்தம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக 4.87 கோடி ரூபாய் வரை அபராதமும் வசூலிக்கப்பட்டதாகவும் வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து ரயில்வே துறை அமைச்சரான ராஜேன் கோஹெயின் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி சேவை தோல்வி
ரயில் பயணிகளுக்குத் தரமான உணவை வழங்குவதை உறுதி செய்ய ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி சமையல் அறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராவை பொருத்தி அதனை நேரலையாக ஆன்லைனில் ஒளிபரப்பும் சேவையினை அன்மையில் அறிமுகம் செய்து அதில் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.