இந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்க அமெரிக்கா, சீனா நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
ரீடைல் வர்த்தகம்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 2 வருடமாக ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் கவனம் செலுத்தி அதிக முதலீட்டுடன் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் முக்கிய வர்த்தகத் தளமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்.
ஆன்லைன் ஆப்லைன்
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து அளிக்க முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய பங்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் அலிபாபா
இந்நிலையில் சீனாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா தற்போது நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருபுறமும் லாபம் அதிகம்
இந்த முதலீடும் கூட்டணியும் உறுதி ஆனால் சீனா நிறுவனமான அலிபாபா-விற்கு இந்திய சந்தையை அடையவும், ரிலையன்ஸ் நிறுவனம் அலிபாபா மூலம் உலகம் முழுவதும் விற்பனை செய்யவும் முடியும்.
அனைத்திற்கும் மேலாக அலிபாபா முதலீட்டில் இயங்கும் பேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தனது விற்பனை தளத்தில் சேர்க்கவும் வாய்ப்புகள் உருவாகும்.
பாதிப்பு
இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய வால்மார்ட் நிறுவனத்திற்கும் சரி, இந்தியாவில் பல பில்லியன் டாலர்களைக் கொட்டும் அமேசான் நிறுவனத்திற்கும் சரி பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என்பது உறுதி.