4 அடுக்குகளாக விதிக்கப்பட்டு வரும் சரக்கு மற்றும சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை 2 அடுக்குகளாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பெங்களூரு மண்டல மத்திய மறைமுக வரிகள் முதன்மை ஆணையர் ஏ.கே. ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி தற்போது 5, 12, 18, 28 என்ற 4 அடுக்குகளாக உள்ளது. அதில் 90 விழுக்காடு வரிகள் 18 சதவீதத்துக்கு குறைவாக விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சீர்குலைக்கும் சட்டமா
இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஜிஎஸ்டி நடைமுறைத் தேவைகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசிய ஜோஷி, சரக்கு மற்றும் சேவை வரி சீர்குலைக்கும் சட்டம் அல்ல என்றார். வெளிப்படையான சட்டமாக இருப்பதால் தான் சந்தேகங்கள் நிரப்பிய வர்த்தகத்துறை, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறினார்.
சிக்கல்கள் இல்லை
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல்வேறு குறைகள் இருந்தன. நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததை ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர், குறைகள் தற்போது களையப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் தற்போது பலர் ஏமாற்றி வருவதாகக் கூறினார். இதே போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று ஜோஷி எச்சரித்தார்.
தயக்கம் வேண்டாம்
தொடக்கத்தில் கிரீடிட் கார்டு பெறும்போது இருந்த தயக்கங்கள், பரிவர்த்தனையை எளிதாக்கியபோது கவர்ச்சியை உருவாக்கியது. அதேபோல ஜிஎஸ்டி வரியும் காலப்போக்கில் எளிதாக இருக்கும் என்றார்.
அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரி 60 லட்சம் கோடியிலிருந்து 1.10 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். ஆர்வத்துடன் பல துறைகள் வரிவிதிப்புக்கு இணங்கியதே காரணம் என்றார். புதிய வரி முறையில் குறைபாடுகள் இருப்பினும், இந்த சீர்திருத்தத்தை கொண்டாட வேண்டும் என ஜோஷி கூறினார்.