இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் இடையிலான இந்தக் காலாண்டில் டிசிஎஸ்-ன் நிகர லாபம் 7,901 கோடி ரூபாயாக உள்ளது என்ற தெரிவித்துள்ளனர்.
சென்ற காலாண்டுடன் ஒப்பிடும் போது 7.6 சதவீதமும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.6 சதவீதமும் கூடுதலாக நிகர லாபத்தினை டிசிஎஸ் பதிவு செய்துள்ளது.
வருவாய்
டிசிஎஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 31,360 கோடி ரூபாயினையும், சென்ற காலாண்டில் 35,486 கோடி ரூபாயினையும் வருவாயாகப் பெற்று இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 20.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்
100 மில்லியன் டாலருக்கும் கூடுதலான மதிப்பிலான திட்டங்களை 4 புதிய வாடிக்கையாளர்களும், 20 மில்லியன் டாலருக்கும் கூடுதலான மதிப்பிலான திட்டங்களை 7 புதிய வாடிக்கையாளர்களும், 10 மில்லியண் டாலருக்கும் கூடுதல் மதிப்பிலான திட்டங்களை 10 வாடிக்கையாளர்களும், 1 மில்லியன் டாலருக்கும் கூடுதலான மதிப்புள்ள புதிய திட்டங்களை 11 வாடிக்கையாளர்களும் அளித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
டிசிஎஸ் நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் 2,79,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டாம் காலாண்டில் 10,227 ஊழியர்கள் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் டிசிஎஸ் நிறுவனத்தினை விட்டு 10.9 சதவீதம் நபர்கள் வெளியேறியுள்ளனர்.
பங்குகளின் வருவாய்
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு இந்த ஆண்டு 22.7 சதவீதம் அதிகரித்து 20.66 ரூபாய் வருவாயினை அளித்துள்ளது.
டிவிடண்ட்
டிசிஎஸ்-ல் முதலீடு செய்துள்ள ஒவ்வொரு பங்குகளுக்கு 4 ரூபாயினை டிவிடண்ட்டாக அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பங்குகள்
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் இன்றைய சந்தை நேர முடிவில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 63.30 புள்ளிகள் என 3.10 சதவீதம் சரிந்து 1,979.75 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.