கோடாக் மஹிந்தரா வங்கி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த லாப உயர்வுக்கு வட்டி விகித உயர்வு மற்றும் கட்டண உயர்வு போன்றவை காரணங்கள் என்று கூறப்படுகிறது.
நிகர லாபம்
2வது காலாண்டில் கோடாக் மஹிந்தரா வங்கியின் நிகர லாபம் 1,165 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,142 கோடி ரூபாயினை நிகர லாபமாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வாரா கடன் சரிவு
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் கோடாக் மஹிந்தரா வங்கியின் வாரா கடன் 2.15 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதுவே சென்ற காலாண்டில் 2.17 சதவீதமாகவும், சென்ற ஆண்டின் இரண்டால் காலாண்டில் 2.47 சதவீதமாகவும் வாரா கடன் இருந்தது.
வட்டி வருவாய்
கடன் திட்டங்களின் வட்டி வருவாய் 21 சதவீதம் என அதிகரித்து 5,811 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகப் பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையினில் குறிப்பிட்டுள்ளனர்.
பங்கு சந்தை
காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு சரிந்த கோடாக் மஹிந்தராவின் பங்குகள் சந்தை முடியும் போது 0.45 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 1,177.30 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.