இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாரா மோட்டார்ஸ் புதன்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 1,048.80 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டு 2,482.78 கோடி ரூபாயாக வருவாயினைப் பதிவு செய்தது.
டாடா மோட்டார்ஸின் ஆடம்பர கார் தயாரிப்பு பிரிவான ஜாகுவார் ஐரோப்பிய யூனியனில் செய்யப்பட்ட டீசல் வாகன சட்ட திருத்தங்களினால் 101 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் வர்த்தகப் போரினால் சீனாவில் ஜேஎல்ஆர் கார் விற்பனை 13.2 சதவீதமாகச் சரிந்து 1,29,887 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வருவாய்
அதே நேரம் டாடா மோட்டார்ஸின் மொத்த வருவாய் 72,729.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 70,344.76 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த விற்பனை
டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 190,283 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் வணிக வாகனங்களின் வளர்ச்சி 29 சதவீதமாகவும், பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது.
முதலீடுகள்
டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மீது 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.
பங்குகள் மீதான வருவாய்
ரூ. 2 மதிப்பிலான பங்குகள் மீதான வருவாய் முதல் காலாண்டில் 5 ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 3 ரூபாயாகக் குறைந்துள்ளது.
பங்கு சந்தை
நட்டம் அடைந்த போதிலும் டாடா மோட்டார்ஸின் பங்குகள் மதிப்பு இன்று 1.35 புள்ளிகள் என 0.76 சதவீதம் உயர்ந்து 178.65 ரூபாயாக உள்ளது.