ரிலையன்ஸ் ஜியோ மூலம் இரண்டு வ் அருடத்தில் இந்திய டெலிகாம் சந்தையினைப் புரட்டிப்போட்ட முகேஷ் அம்பானி அடுத்தக் கட்டமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது போர் தொடுக்க உள்ளார்.
ஒதிஷா முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய புதிய வணிகத் தளத்தினை உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வணிகர்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிம் இருந்து 3 கோடி வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் சிறு வணிகர்களாலும் மிகப் பெரிய நிறுவனங்கள் போன்று செயல்பட முடியும் என்றும் அதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
இ-காமர்ஸ்
தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஆன்லைன் டு ஆப்லைன் வழியில் செயல் படும் வணிகமாக ரிலையன்ஸின் புதிய தளம் இருக்கும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
பிராட்பேண்ட்
ரிலையன்ஸ் ஜியோ செயல்படத் தொடங்கியது முதல் இணையதளப் பிராட்பேண்ட் சேவை பயன்படுத்துவதில் 155 வது இடத்தில் இருந்த இந்தியா இன்று உலகளவில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது என்று பெருமைகொண்டுள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ இரண்டும் வழக்கை எளிமையாக்க உதவுவது மட்டும் இல்லாமல் வணிகம் செய்வதையும் எளிமையாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் அளவில் பயன் அடைவார்கள் என்று கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பு
ஒதிஷா போன்ற மாநிலங்களில் இது புதிய வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
முதலீடு
ஒதிஷாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கனவே 6,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ள நிலையில் தற்போது அடுத்த மூன்று வருடத்தில் கூடுதலாக 3,000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளதாகவும் இதன் மூலம் 30,000 நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அம்பானி தெரிவித்துள்ளார்.
ஒதிஷா
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒதிஷாவின் அனைத்து நகரங்கள் மற்றும் 43 ஆயிரம் கிராமங்களில் சேவையினை வழங்கி வருவதாகவும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.