statue of unity கம்பீரமாக மக்கள் பணத்திலும் வயித்தெரிச்சலில் நின்று கொண்டு இருக்கும் போது... அதே போன்ற விஷயத்தை பாஜக மற்றும் மோடியை எதிர்க்கும் andhra முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் எடுத்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் உருப்படியான விதத்தில் என்பது தான் ஆறுதல்.
சந்திரபாபு நாயுடு
ஆந்திரத்துக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் கேட்டு வந்ததும், அதற்கு மோடி மெளனியாகவே தொடர்ந்து வந்ததால், களத்தில் இறங்கி பாஜகவுக்கு எதிராக தென்னகத்தின் பல தலைவர்களைs சந்தித்து மூன்றாவது அணி திரட்டுவதுயும், மம்தா பேனர்ஜியை சந்தித்து அணிக்கு வலு சேர்த்தது எல்லாம் செய்தி. அதனைத் தொடர்ந்து சிபிஐக்கு ஆந்திரத்தில் உள் நுழையத் தடை விதித்தது ஒரு பெரிய அதிரடி என்றால்... மோடி பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயத்தையும் காலி செய்ய இருக்கிறார் சந்திர பாபு நாயுடு.
அமராவதி
ஹைதராபாத் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு தெலுங்கானாவுக்குப் போய்விடும். எனவே ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அந்த புதிய தலைநகரத்தில் ஆந்திர சட்ட சபை கட்டடத்தை, மோடி திறந்து வைத்த சிலையை விட 68 மீட்டர் உயரமாக கட்டுமானிக்க இருக்கிறார்கள்.
இந்தியாவின் உயரமான கட்டடம்
ஆந்திர சட்ட சபை திட்டமிட்ட படி கட்டி முடித்தால் 80 மீட்டர் உயர சட்ட சபை கட்டடத்தோடு, 250 மீட்டர் உயரத்துக்கு ஒரு கோபுரமும் வரும். மொத்தத்தில் 330 மீட்டர் உயரத்துடன் இந்தியாவின் உயரமான கட்டுமானமாக இருக்குமாம். இந்த சட்ட சபைக் கட்டடத்தை ஒரு லண்டன் நிறுவனம் கட்டுமானம் செய்ய இருக்கிறதாம். சட்ட சபைக்கான டிசைனை தயாரித்தது Norma Fosters என்கிற லண்டன் நிறுவனமாம். ஆனால் இந்த பெயரை தட்டிச் செல்ல 2010-லேயே பாஜக அடித்தளம் இட்டு இருக்கிறது.
மங்கள் பிரபாத் லோதா
தெற்கு மும்பையின் மலபார் ஹில் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் லோதா குழுமத்தின் நிறுவனர் மங்கள் பிரபாத் லோதா. இவர் உலகின் உயரமான குடியிருப்பை மும்பை பரேல் பகுதியில் கட்டிக் கொண்டு இருக்கிறார். 117 அடுக்குமாடிகளோடு 423 மீட்டர் உயரத்துக்கு World One என்கிற பெயரில் 2010-ல் இருந்து கட்டுமானம் செய்து வருகிறார். மங்கள் பிரபாத் லோதாவைப் பற்றி படிக்க:
இந்த கட்டடம் கட்டி முடிக்கப் பட்டால் சந்திர பாபு நாயுடுவின் பெயர் காலி தான் என பாஜக குதூகலித்து வருகிறதாம்.
இதெல்லாம் தாங்குமா...?
சரி ஆந்திரத்துக்கு வருவோம். அமராவதியில் அமைக்கப்படும் இந்த சட்ட சபையின் கோபுரம் நில நடுக்கம், புயல், சூறாவளி போன்றவைகளை தாங்கும் திறனோடு கட்டப் படுகிறதாம். முதல் 80 மீட்டர் கட்டடத்தில் சுமார் 300 பேர் வரை அமர்ந்து பணியாற்றும் விதத்தில் அமைத்திருக்கிறார்களாம். 250 மீட்டர் உயர கோபுரத்தில் அதிகபட்சம் 20 பேர் வரை ஒரே சமயத்தில் சென்று அமராவதி நகர அழகை பார்க்கலாமாம்.
தலைமைச் செயலகம்
சட்ட சபையைத் தொடர்ந்து அதற்கு அருகிலேயே ஐந்து தலைமைச் செயலக கட்டடமும் கட்ட இருக்கிறார்களாம். இந்த ஐந்து தலைமை செயலக கட்டடங்களின் கட்டுமான விவரம் தொடர்பாக தேவையான டெண்டர்களை தயாரிக்க ஆந்திர தலை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம்.
நானும் சிலை வெக்கிறேன்
அக்டோபர் 31, 2018 வந்ததும் வந்தது மோடிக்கு எதிராகவோ அல்லது தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, அரசியல் ஆதாயத்துக்கோ ஆளுக்கு ஒரு சிலை வைக்க, குறிப்பாக ஒருவரை விட ஒருவர் அதிக உயரத்துக்கு சிலை வைக்க அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கர்நாடகா காவிரித் தாய்க்கு ஒரு சிலை, மகாராஷ்டிரம் சிவாஜிக்கு ஒரு சிலை, உத்திரப் பிரதேசம் ராமனுக்கு ஒரு சிலை என அறிவித்திருக்கிறார்கள்.
சிலை இருக்கட்டும்
இந்த சிலைகளால் ஏதாவது புண்ணியமா இல்லை, மொத்த மக்கள் வரிப் பணமும் வீன் தான் என்பதை எந்த அரசியல் தலைவர்களும் உணரவில்லை போல. மறைந்த சத்ரபதி சிவாஜியோ, காவிரித் தாயோ இவ்வளவு பெரிய சிலையை வைக்கச் சொல்லிக் கேட்டார்களா என்ன...? ஏற்கனவே கட்டி முடித்த படேல் சிலை காசை எதற்கு எல்லாம் செலவழித்திருக்கலாம் என ஒரு கணிப்பு இருக்கிறது அதை பாருங்கள்...
3000 கோடி ரூபாய்க்கு
அமெரிக்க சுதந்திர தேவிச் சிலையை விட இரண்டு மடங்கு உயரமான படேல் சிலைக்கு செய்த 3000 கோடி ரூபாய்க்கு இந்திய மக்களுக்கு 3 கோடி குடும்பங்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கலாம், 2 ஐஐடி அல்லது எய்ம்ஸ் மருத்துவ வளாகங்களை கட்டிக் கொடுத்திருக்கலாம், 4 சோலார் மின் நிலையங்களை நிறுவி இருக்கலாம், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக இந்த மொத்த தொகையையும் கொடுத்திருக்கலாம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல 15 கட்டி மாணவர்களை ஈர்த்திருக்கலாம்....
மோடி முன்னோடி
இதை எல்லாம் செய்யாமல் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு, உலோகங்களை செலவு செய்துவிட்டு எதுக்கு மோடிஜி இந்த வீராப்பு...? நீங்கள் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் முன்னோடியாக மட்டீர்களா...? ஒன்று மொத்தமாக பணமதிப்பிழப்பு அறிவிக்கிறீர்கள், மக்களை வாட்டும் ஜிஎஸ்டிக்கு ஓகே சொல்கிறீர்கள், கண்ட மேனிக்கு செலவு செய்து சிலை வைக்கிறீர்கள்... இப்படி எல்லாமே தவறாக செய்து விட்டு, மற்ற அரசியல் வாதிகளையும் அதே தவறை செய்யத் தூண்டுகிறீர்கள் என சமூக வலைதளங்களில் ஒரு ஓரமாக பேச்சுக்கள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன. இதெல்லாம் பார்க்க அவருக்கு நேரம் கிடையாதே... அது சரி மக்கள் குரல் கேட்டுவிட்டால் அது மோடியே கிடையாதே...!