நாம் எடுத்த ரயில் டிக்கெட்களை நம்மால் பயணம் செய்ய முடியவில்லை என்றால் நம் குடும்பத்தினருக்கு எப்படி மாற்றலாம் என்பதை பார்த்துவிட்டோம். பார்க்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்: சரி இனி, கல்யாணத்துக்கு irctc-ல் எப்படி முன் பதிவு செய்து பயணிக்கலாம் எனப் பார்ப்போம்.
கல்யாணம் அழைப்பு
"எனக்கு பெங்களூருல கல்யாணம், எல்லாரும் வந்துடுங்க" என நீங்கள் சென்னைவாசிகளைக் கூப்பிட்டாலே வருவது கஷ்டம், இதில் மாப்பிளை மற்றும் பெண்ணின் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது 1. தனியாக பேருந்து அல்லது கார் புக் செய்து அழைத்துச் செல்லலாம். பட்ஜெட் கல்யாணம் என்றால் என்ன செய்வது...ரயிலில் அழைத்துச் செல்லலாம். என்ன தம்பி சொல்றீங்க என ஆச்சர்யப்பட்டால்... ஆம் தான் விடை.
எங்கே
irctc வலை தளத்தில் ஆறு பேருக்கு மேல் ஒரு டிக்கெட்டில் முன் பதிவு செய்ய இயலாது. எனவே ஆறு பேருக்கு மேல் என்றாலே நீங்கள் ரயில் நிலையங்களில் இருக்கும் முன் பதிவுய் மையங்களில் தான் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது ஆறு ஆறு பேராக வலைதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் மேல் பதிவு செய்ய முடியாது என்பதையும் கவனிக்கவும்.
எத்தனை பேர்
உங்கள் கல்யாணத்துக்கு எத்தனை பேர் வர இருக்கிறார்கள் என்பதை விட நீங்கள் பதிவு செய்ய இருக்கும் ரயிலில் எத்தனை சீட்டுக்கள் இருக்கின்றன என்பது தான் முக்கியம். காரணம் ஒரு ரயிலில் நீங்கள் புக் செய்ய இருக்கும் வகுப்பில் இருக்கும் மொத்த சீட்டுக்களில் 25% சீட்டுகளுக்கு மேல் ஒரு குழுவாக முன் பதிவு செய்ய முடியாது. அதையும் மீறி கொடுக்க உயர் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. அப்படி மிஞ்சிப் போனாலும் மொத்த இருக்கையில் 50%-க்கு மேல் கொடுக்க முடியாது.
எடுத்துக் காட்டு
சென்னை பெங்களூரு செல்ல காலை 6 மணி சதாப்தியில் ஒரு குழுவாக பல்க் புக்கிங் செய்ய விரும்புகிறீர்கள். அந்த சதாப்தி ரயிலில் இருக்கும் மொத்த இருக்கைகள் 750 என்றால் அதிகபட்சமாக 375 பேருக்கு மட்டுமே சீட்டு வழங்கப்படும்.
யார் கொடுப்பார்
50 பேருக்கு பல்க் புக்கிங் செய்ய வேண்டும் என்றால் CRS (Chief Reservation Supervisor)/shift-incharge/SS அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். 51 முதல் 100 பேருக்குள் என்றால் area Manager/ACM/ ATM/SM அதிகாரிகள் அனுமதி கொடுப்பார்கள். 100 பேருக்கு மேல் என்றால் Sr. DCM/DCM/DTM/Area Manager அதிகாரிகளிடம் தான் அனுமதி பெற வேண்டும்.
நம்மால் முடியுமா
பொதுவாக, இவ்வளவு பெரிய அதிகாரிகளை எல்லாம் பார்த்துப் பேசி, மாதக் கணக்கில் அலைந்து வாங்கி முடிப்பதற்கு பதிலாக நாமே ஒரு தனிப் பேருந்து வைத்து விடலாம் எனத் தோன்றும் அது உண்மை தான். பொதுவாக சாதாரண மக்கள், அதிகாரப் பிடிப்பு இல்லாதவர்கள் எல்லாம் இப்படி பல்க் புக்கிங் செய்ய முடியாது என சமீபத்தில் ஒரு ரயில்வே அதிகாரியே பேட்டி கொடுத்தார்.
யாரால் முடியும்
நிறுவனங்கள், அமைப்புகளாக இருப்பவர்களுக்கு இந்த பல்க் புக்கிங் சற்று எளிதாக கிடைக்குமாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எளிதில் கிடைக்குமாம்.
எப்படி விண்ணப்பிக்க
முதலில் பல்க் புக்கிங் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, எத்தனை பேர் பயணிக்க இருக்கிறார்கள், பயணிக்க இருப்பவர்களின் பெயர், வயது, பாலினம் போன்றவைகளையும், விண்ணப்பிப்பவர் தன்னுடைய அடையாள அட்டையையும் இணைத்துத் தர வேண்டும். எல்லாம் மூன்று பிரதிகளாக இருக்க வேண்டும்.
நேரம் & இடம்
இந்தியாவில் உள்ள எல்லா முன் பதிவு மையங்களிலும் இப்படி பல்க் புக்கிங் செய்துவிட முடியாது. விசாரித்து பல்க் புக்கிங் செய்யும் முன் பதிவு மையங்களுக்கு காலை 8 முதல் 9 மணிக்குள் சென்று புக் செய்து கொள்ள வேண்டும்.
ரிட்டன்
இந்த பல்க் புக்கிங் வசதியில் ஒரு முக்கியமான சேவையையும் சேர்த்து வழங்குகிறது irctc. ரிட்டன் வரும் பயணச் சீட்டுகளையும் இதே பல்க் புக்கிங் முறையில் செய்துவிடலாம்.
ஆள் மாற்றம்
"சாமி என்னாள வர முடியாது, என் மவன் வருவான்" என ஒரு நெருங்கிய சொந்தம் சொல்கிறது என்றால்... என்ன செய்வீர்கள். அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
சமர்பித்தல்
Chief Reservation Supervisor -இடம் நீங்கள் முன் பதிவு செய்த டிக்கேட்டோடு, உங்கள் அடையாள அட்டைகளில் ஒன்றை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதோடு யாருடைய பயணச் சீட்டை மாற்ற இருக்கிறீர்களோ அவருடைய அடையாள அட்டையும், யாருக்கு மாற்ற இருக்கிறீர்களோ, அவரின் அடையாள அட்டையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
எப்போதுக்குள்
ரயில் திட்டமிட்ட இடத்தில், திட்டமிட்ட நேரத்தில் இருந்து புறப்பட 48 மணி நேரத்துக்கு முன் Chief Reservation Supervisor-ஐ பார்த்து டிக்கேட் மாற்றம் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் chart preparation-ல் பிரச்னைகள் எழும்.
எடுத்துக் காட்டு
நீங்கள் விஜயவாடாவில் இருந்து தில்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 12621 ரயிலில் 30-11-2018 பயணம் செய்ய இருக்கிறீர்கள். இன்று தேதி 27-11-2018. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.
புறப்படும் நேரம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் 29-11-2018 அன்று மாலை 5.15க்கு புறப்படும். 28-11-2018 காலை சுமார் 4.30 மணிக்கு விஜயவாடாவந்து சேரும். எனவே நீங்கள் உங்கள் டிக்கெட்டை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 27-11-2018 அன்று மாலை 5.00 மணிக்குள் செய்ய வேண்டும். அதாவது ரயில் தன்னுடைய முதல் இடத்தில் பயணத்தை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் மாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் Chart preparation இறுதியாக ரயிலில் பயணிக்க இருக்கும் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் எந்த சிக்கலும் இல்லாமல் இடம் பெறும்.
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்
மேலே கல்யாணத்துக்கு சொன்னது போலத் தான் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும். விண்ணப்பித்தல், முன்பதிவு செய்தல், ஆள் மாற்றங்களை முறையாக மேற்கொள்ளுதல் எல்லாமே. அங்கே கல்யாணத்துக்கு விண்ணப்பிப்பவர் தலைவராக கருதப்படுவார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல்வர், தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர்கள் முன்னின்று இந்த விஷயங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
10% முக்கியம்
மிக முக்கியமாக, எத்தனை பேரை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் முன் பதிவு செய்திருக்கும் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சம் 10% சீட்டுக்களை மட்டுமே ஆள் மாற்றம் செய்யலாம். அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.