சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ. 25 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். தங்கம் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இந்த விலை உயர்வால் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். உலகத்தின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றான பளபளக்கும் இந்த மஞ்சள் உலோகம், பன்னூறு ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறது. தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நம் பாட்டி காலத்தில் அதாவது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் 1942ஆம் ஆண்டு பத்து கிராம் தங்கம் 44 ரூபாய் ஆக இருந்தது.
இப்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,968க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,129 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,032க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 3134 ஆகவும் ஒரு சவரன் தங்கம் 25072 ஆகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தியாவால் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய் போன்றவையும் உலக சந்தைகளில் பெரும் அளவில் வர்த்தகம் செய்யப்படுபவை. அவற்றுக்கும் தங்கத்துக்கும் உறவு உண்டு. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை குறையும். அது குறைந்தால் தங்கம் விலை கூடும்.
தங்கத்தை விரும்பும் மக்கள்
இன்றைக்கு தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை. விரும்பாத மக்கள் இல்லை. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. கடந்த 26ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 3,121க்கும், சவரன் ரூ.24,968க்கும் விற்கப்பட்டது. சவரன் ரூ. 232 அளவுக்கு உயர்ந்தது. தங்கம் விலை சவரன் ரூ. 24,968 என்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்ற சாதனையையும் படைத்தது. அதன் பிறகு 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாள். இதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.
அதிரடி விலை உயர்வு
திங்கட்கிழமையான நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,127க்கும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.25,016க்கும் விற்கப்பட்டது. இந்த விலை மீண்டும் புதிய சாதனையையும், புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விலை உயர்வால் நகை கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தங்கத்தின் தேவை அதிகரிப்பு
அமெரிக்கா, மெக்சிகோ இடையிலான பிரச்னையால் அமெரிக்காவினுடைய பொருளாதார குறியீடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. வேலை வாய்ப்புக்கான குறியீடும் சரிவில் உள்ளது. இது போன்ற காரணங்களால் பெரிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர். இதனால், உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது சமீபத்திய விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று சென்னை தங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியுள்ளார்.
தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. தங்கம் விலை உயர்வால் கடைகளில் நகை விற்பனை சிறிது சரிந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே நகை வாங்க கடைகளுக்கு வருகின்றனர் என்றும் நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,450 ஆக இருந்தது. 2016 ஜூலை மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,900ஐ தொட்டு பின் ஆறுமாத காலத்தில் மீண்டும் 2,450க்கு அருகில் வந்தது. தங்கம் அவ்வப்போது இறங்கினாலும், மீண்டும் மீண்டும் உயர்ந்து இப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.3,150 ஆக உள்ளது.
தங்கம் வாங்குவது ஏன்
தங்கத்தின் விலை ஏன் இப்படி அதிகரிக்கிறது என்று பார்த்தால், தங்கம் வெறும் நகைக்காக பயன்படும் ஒரு உலோகம் மட்டுமில்லை, அது பல்வேறு தரப்பினரால் பல்வேறு காரணங்களுக்காக வாங்கப்பட்டு விற்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களும் அவர்கள் தேவைகளுக்காக தங்க நகைகள் வாங்குகிறார்கள். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் வர்த்தகர்கள் லாப நோக்கில் தங்கத்தை வாங்கி விற்று லாபம் பார்க்கிறார்கள். முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி இருப்பில் வைத்தால் விலை ஏறும் என்று கருதி பெரும் அளவுகளில் தங்கம் வாங்குகிறார்கள்.
தங்கம் சேமிக்கும் நாடுகள்
பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் அவர்களது ரிசர்வ் வங்கிகள் மூலம் பெரும் அளவுகளில் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். வெர்ல்ட் கோல்ட் கவுன்சில் தகவல்படி, 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே, 480 டன் தங்கத்தை பல்வேறு அரசாங்கங்களின் ரிசர்வ் வங்கிகள் வாங்கியிருக்கின்றன. நம் தேசத்தின் ரிசர்வ் வங்கி 40 டன் தங்கத்தை வாங்கி, அதன் மொத்த இருப்பை 592 டன்னாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க டாலர் உயர்வு
இந்தியா ஆண்டு ஒன்றுக்கு இந்தியா சுமார் 700 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. இதில் ஒரு பகுதி நகை களாக மதிப்புக் கூட்டப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்குப் ஏற்றுமதி செய்யப்பட்டாலும். இந்தியா செய்வது இறக்குமதிதான். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக, இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு கூடினால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரிக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்து ரூ.70க்கும் கீழ் வந்தது. அதனால் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இப்போது ஜனவரி மாதம் சில நாட்களாக டாலர் மதிப்பு அதிகரித்து ரூபாய் மதிப்பு குறைந்திருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் சிறு உயர்வு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாங்கம் கணிப்பு பலிக்குமா?
10 ஆண்டுகளுக்கு முன்பு 2008ஆம் ஆண்டு 12,500 ரூபாயாக விற்பனையான தங்கம் நேற்று ரூ.25000 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.3134 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 25072 ஆகவும் சுத்தத்தங்கம் பத்து கிராம் 33518 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விலை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். விலை சிறிது சிறிதாக குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை குறையும் இது 19 மாதங்களில் இல்லாத விலையாக இருக்கும் என்று பஞ்சாங்கத்திலும் கணித்துள்ளனர் வல்லுனர்களும் கணித்துள்ளனர். ஆண்டு இறுதியில் தங்கம் விலை சீராக இருக்கும் என்றும் கணித்துள்ளனர். பஞ்சாங்கம் கணிப்பு பலிக்குமா பார்க்கலாம்.