இந்திய வங்கிகளில் நிலுவையில் இருக்கும் திவால் வழக்குகளை முடித்தால், 67,000 கோடி ரூபாய் கடன் தொகை மீண்டும் வங்கிகளுக்கு கிடைக்குமாம். இதைச் சொன்னது சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான'இக்ரா (ICRA)'.
3000 நிறுவனங்கள்
கடந்த, 2016, மே மாதம், நிறுவன திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ், வாராக் கடன் தொடர்பாக, 3,000 -க்கும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT - National Company Law Tribunal) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மீதான திவால் நடவடிக்கையை, அதிகபட்சம், 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என, சட்டம் கூறுகிறது. ஆனால், 2,300-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு 270 நாட்கள் கடந்தும் தீர்வு காணப்படாமல் உள்ளன.
586 மட்டுமே தீர்வு
வாராக் கடன் வசூல் தொடர்பாக, இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், 2018, டிசம்பர் நிலவரப்படி, 898 வழக்குகளில், 586 வழக்குகள் சமரச தீர்வு மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளன.அவற்றில், 79 வழக்குகள் மூலம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாம். 309 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையும் துவங்கி உள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை தான் என பாராட்டி இருக்கிறது.
ஆனால் 354 நாட்கள் ஓகே தான்
இதுவரை தீர்த்துவைக்கப்பட்ட பெரும்பாலான வழக்குகளுக்கு சராசரியாக, 354 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது சட்டப்படி நிர்ணயித்த 270 நாட்களை விட அதிகம். ரிசர்வ் வங்கி, முதன் முதலாக, 2017ல், 'பூஷன் பவர் அண்டு ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா' உள்ளிட்ட, 12 நிறுவனங்கள் மீது தான் திவால் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது.
50% கடன் போச்சா..?
திவால் வழக்குகளில், விரைந்து தீர்வு காணும் நோக்கில் அல்லது வருவது வரை வரட்டுமே எனும் நோக்கில் கடன் கொடுத்த நிறுவனங்கள், சராசரியாக, 52 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளன. ஒரு சில வழக்கில், ஒரு சதவிகித கடன் கூட தள்ளுபடி செய்யப்படாமல், மொத்த கடனும் பைசா பாக்கி இல்லாமல் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் திவால் வழக்குளை சரியாக தீர்த்து வைத்துக் கொண்டிருந்தால் அடுத்த சில காலாண்டுகளில், இந்திய வங்கிகளுக்கு சுமார் 60 முதல் 67 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும். இதற்கு மேலும் மத்திய அரசு இந்திய வங்கிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டுமா என்ன..?