டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1.02 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டுவது இது மூன்றாவது முறை ஆகும். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கத
மத்திய நிதி அமைச்சகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல், 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் தொகையை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி
கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர். வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
வரி வசூலில் இலக்கு நிர்ணயம்
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.
2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி வசூல்
ஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 கோடி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது.
ஒரு லட்சம் கோடி ரூபாய்
ஜிஎஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ஆம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.
பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாலும், விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது. வரிச்சலுகை மூலம் நுகர்வோரின் சுமையை குறைந்துள்ளபோதிலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு, ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 31 வரையிலுமான டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 3 பி படிவங்களை 73.3 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.