பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் தொடங்கிய ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் 90,000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் ஆகி இருப்பதாக நிதி அமைச்சகம் சொல்லி இருக்கிறது. இது ஜனவரி 30, 2019 நிலவரபடியாம்.
இந்த ஜன் தன் கணக்குத் திட்டத்தின் மூலம் மூன்று முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். 1. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. 2. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் 3. அடல் பென்ஷன் யோஜனா.

இதில் முதல் திட்டமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டம். இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களூக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இரண்டாவது திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் ஒரு Accident policy. இந்த திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கை அல்லது காலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் மூலம் இறந்துவிட்டாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தரப்படும்.
மூன்றாவது திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் இணைந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் தரப்பில் இருந்து முதலீடு செய்ய வேண்டும், அரசும் மக்கள் சார்பாக கொஞ்சம் முதலீடு செய்யும். 60 வயதுக்குப் பின் நாம் செய்த முதலீட்டைப் பொறுத்து நமக்கு பென்ஷனாக காசு வரும்.
இதற்காகத் தான் ஜன் தன் கணக்குத் திட்டத்தைக் கொண்டு வந்தது பாஜக அரசு. இன்று அந்த எளிய மக்கள் கணக்கில் கூட சுமார் 90,000 கோடி ரூபாயை டெபாசிட்டாக பெற்று இருக்கிறார்கள் வங்கிகள்.
இந்த ஜன் தன் திட்டத்தின் கீழ் சுமார் 34.14 கோடி வங்கிக் கணக்குகள் இருக்கிறதாம். இதில் 53 சதவிகிதக் கணக்குகள் பெண்களின் கணக்காம். இந்த 34.14 கோடியில் 27.26 கோடி கணக்குகளுக்கு ரூபே கார்ட் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த 34.14 கோடி வங்கிக் கணக்குகளில் சராசரியாக ஒரு வங்கிக் கணக்கில் 2,615 ரூபாய் டெபாசிட்டாக இருக்கிறது. இதுவே மார்ச் 2015-ல் ஒரு டெபாசிட் கணக்கில் வெறும் 1,065 ரூபாய் தான் இருந்ததாம். ஆக இந்தியாவில் ஏழை எளிய மக்கள் கூட தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போடத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்கிறது நிதி அமைச்சகம்.


Click it and Unblock the Notifications