உலகின் சர்க்கரைக் கிண்ணமாக இருந்த க்யூபாவை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தியா எப்போதோ உலக சர்க்கரை உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துவிட்டது.
இன்று ஆண்டுக்கு சுமார் 300 லட்சம் டன் சர்க்கரையை அசால்டாக உறுபத்தி செய்கிறது இந்தியா. இப்போதும் வரப் போகும் 2019 - 20 நிதி ஆண்டில் சுமார் 315 லட்சம் டன் வரை சர்க்கரை உற்பத்தி செய்யப்படலாம் எனவும் கணித்திருக்கிறது மத்திய அரசு.
சில ஆண்டுகளுக்கு முன் வரை பிரேசில் தான் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி செய்து வந்த நாடு.
எத்தனால்
ஆனால் சர்க்கரைக்கான விலை சரிவு மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு லாபமில்லாத காரணத்தால் கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிட்டார்கள். சர்க்கரையை விட எத்தனால் தயாரிப்பு நிறுவனங்கள் கரும்புகளுக்கு நல்ல விலை கொடுத்ததால் மாற்றிக் கொண்டார்களாம். சரி ஆஸ்திரேலியா, பிரேசில் பிரச்னைக்கு வருவோம்.
WTO
World Trade Organisation-ல் ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் இந்தியா மீது ஒரு வழக்கு தொடுத்திருக்கிறது. எவ்வளவு சொல்லியும் இந்தியா தன் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியத் தொகையை நிறுத்தாததால் சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய மற்றும் பிரேசில் சர்க்கரைகளுக்கான டிமாண்ட் கடுமையாக சரிந்துவிட்டதாம். எனவே இந்திய கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு கொடுக்கும் மானியங்களை நிறுத்தக் கோரி வழக்கு தொடுத்திருக்கிறது.
உதாரணம்
ஒரு கரும்பு விவசாயி பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதைக்கான செலவு 10 ரூபாய், விவசாய நீரருக்கான செலவு - 5 ரூபாய், மின்சாரம் 22 ரூபாய், உரங்கள் - 34 ரூபாய் என நான்கு பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆக இவர்களின் அடக்க விலை 71 ரூபாய்.
இந்தியாவில் நிலை
ஆனால் இந்தியாவில் உரங்களுக்கான மானியம், விதைகளுக்கான மானியம், இலவச தண்ணீர், இலவச மின்சாரம் என விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அதோடு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு மானியங்கள் மேற்கொண்டு அறிவிக்கப்பட்டும் வருகின்றன. அவ்வளவு ஏன் சர்க்கரை போக்குவரத்துக்கும் கூட மானியங்கள் வழங்க திட்டமிட்டு வருகிறது இந்தியா.
இந்திய விலை குறைவு
ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் பகுதிகளில் முழு செலவு செய்து சர்க்கரையை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒரு கிலோ சர்க்கரையை சர்வதேச சந்தையில் விற்கும் விலையை விட இந்திய சர்க்கரை விலை மிகக் குறைவாக கிடைக்கிறது. உதாரணமாக ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலில் ஒரு கிலோ சர்க்கரையின் அடக்க விலை 71 ரூபாய் என்றால், இந்தியாவில் அதே ஒரு கிலோ சர்க்கரையின் அடக்க விலை வெறும் 50 ரூபாயாக இருக்கிறது.
மானியம் கொடுக்காதே
இந்தியாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், மானிய விலையில் மின்சாரம் போன்றவைகள் வழங்குவதால் இந்திய கரும்பு விவசாயிகளின் அடக்க விலை மிகக் குறைவாக இருக்கிறதாம். இதுவே ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் பகுதிகளில் மின்சாரம், உரங்கள் என அனைத்தையும் காசு கொடுத்து வாங்குவதால் அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை தொடர்ந்து அதிக விலைக்கே விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
குறைந்த விலை நல்ல தரம்
சர்வதேச சந்தைகளில், இந்தியா ஒரு கிலோ சர்க்கரையை 90 ரூபாய்க்கும், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதே ஒரு கிலோ சர்க்கரையை 110 ரூபாய்க்கு அனைத்தை செலவுகளையும் சேர்த்து விற்க வேண்டி இருக்கிறது. இப்போது ஒரு நபர் 90 ரூபாய்க்கு விற்கும் சர்க்கரையையும் பார்க்கிறார், 110 ரூபாய்க்கு விற்கும் சர்க்கரையையும் பார்க்கிறார். அதிக வித்தியாசம் இல்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு 90 ரூபாய் சர்க்கரையைத் தானே வாங்குவார். அது தான் சர்வதேச சர்க்கரை ஏற்றுமதியிலும் நடக்கிறது.
ஆஸ்திரேலியா வருத்தம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் பொருளாதார ரீதியாகவும் சரி, ராஜ தந்திர ரீதியாகவும் சரி ஒரு நல்ல உறவே நிலவுகிறது. இருப்பினும் இந்தியா தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்கள் உலக வர்த்தக அமைப்புக சட்டங்களுக்கு எதிரானது. எனவே தான் உலக வர்த்தக மையத்திடம் இந்த பிரச்னையை எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. இதனால் இந்திய ஆஸ்திரேலிய உறவில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் சொல்கிறார் ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சிமன் பர்மிங்ஹாம்.
ஆஸ்திரேலிய விவசாயிகள்
"ஆஸ்திரேலியாவில் உள்ள கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை முதலாளிகள் என ஒரு கணிசமான மக்கள் சர்க்கரை வியாபாரத்தை நம்பி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் 85 சதவிகித சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதிக்கு ஒரு குறிப்பிட்ட அந்நிய செலாவணி வேறு கிடைப்பதால் ஆஸ்திரேலியா இந்த பிரச்னையை பெரிதாகப் பார்க்கிறது" என ஆஸ்திரேலியாவின் வணிகத் துறை அமைச்சர் மார்க் கவுல்டன் (Mark Coulton) கூறுகிறார்.
ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு
இந்த சர்க்கரையை நம்பி ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது. அந்த மக்களின் வேலை வாய்ப்புகள் எல்லாமே சர்க்கரை விலையைப் பொறுத்து தான் அமையும். ஆக இந்த ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியினரைக் காக்கவும், வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் நாங்கள் இந்தியா மீது புகார் கொடுத்திருக்கிறோம் என்கிறார் மார்க்.
சமமற்ற நிலை
ஆக இந்திய விவசாயிகள் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பிரச்னை இல்லை, ஆனால் அரசு அவர்களுக்கு மானியம் கொடுத்து அவர்களை உற்பத்தி செய்யச் சொல்லி தூண்டுவது தான் பிரச்னை என்கிறது ஆஸ்திரேலியா. உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து இந்தியா மானியத்தை ரத்து செய்யச் சொல்லியோ அல்லது கொடுக்கும் மானியத்தை வேறு வகைகளில் கொடுக்கும் படியோ சொல்லும் என எதிர்பார்க்கிறார்களாம்.
முதலிடத்துக்கு போட்டி இல்லை
ஏற்கனவே சொன்னது போல, சில வருடங்களுக்கு முன் வரை பிரேசில் தான் உலகின் சர்க்கரைக் கிண்ணமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் தன் பெரும்பாலான கரும்பு உற்பத்தியை எத்தனால் தயாரிக்க பயன்படுத்திக் கொள்வதால் ஆஸ்திரேலியா அளவுக்கு முனைப்பு காட்டாமல் இருக்கிறது பிரேசில்.
காத்திருப்போம்
இப்போது தான் பாகிஸ்தான் உடனான போர் பிரச்னைகள் தணிந்து வருகிறது. அதற்குள் இந்தியா மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கிறது ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில். இந்த வழக்கை இந்தியா எப்படி கையாளப் போகிறது. கரும்பு விவசாயிகளுக்கான மானியத்தை ரத்து செய்யப் போகிறதா...? இல்லையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.