டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், சோலார் மின்உற்பத்திக்கு ஆகும் செலவு சுமார் 6 சதவிகிதம் வரையிலும் அதிகமாகிவிட்டதாக ஆற்றல், நீர் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலும் நிலையான அபிவிருத்திக்கான சர்வதேச ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தினால் மூலப்பொருட்களின் விலை கணிசமாக குறையும், உற்பத்தி விலை குறையும், விலை வாசி கட்டுக்குள் இருக்கும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆளும் கட்சியினர் கூறிய நிலையில் தற்போது ஜிஎஸ்டியினால் சோலார் மின் உற்பத்திக்கான செலவு அதிகமாகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.
சோலார் மின் உற்பத்திக்கான செலவு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தான் அதிகமாகிவிட்டதாக ஆய்வறிக்கை சொல்லும் அதே சமயத்தில், ஜிஎஸ்டி வந்ததால் தான் அனல் மின் உற்பத்தி செலவு சுமார் 1.6 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளுக்கு நாள் பெருகி வரும் உள்கட்டமைப்பு, தொழிற்சாலை போன்றவை அனைத்துக்கும் தங்கு தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கனவு. ஆனாலும், நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதற்கு ஒரே தீர்வு சோலார் மின் உற்பத்தி தான் என்பது மத்திய அரசின் எண்ணம். சோலார் மின் உற்பத்திக்கு உற்பத்தி செலவானது அனல் மின் உற்பத்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது.
நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரத்திற்கு உற்பத்தி செலவானது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் அடக்க விலை குறைவாக இருந்தாலும், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதால், வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் கால தாமதமும் ஆகிறது. கூடவே மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினாலும் இறக்குமதி செய்யும் நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும்.
மத்திய அரசும், சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவில் 30 சதவிகிதத்தை மானியமாக வழங்குகிறது. ஆனால், சோலார் மின் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் வாங்குவதற்காக ஜிஸ்டி வரியாக 5 சதவிகிதம் செலுத்தவேண்டியுள்ளது. சோலார் உற்பத்திக்கான உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிவிட்டால், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகரிக்கும்.
அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் ஜிஎஸ்டி வரி விகித முறையால் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வது கடினமாக உள்ளது. மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிமும், மீதமுள்ள வேலையை செய்வதற்கான ஜிஎஸ்டி வரியாக 18 சதவிகிதமும் விதிக்கப்படுகிறது. இத்தகைய மின்திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பது கூடுதல் சுமையாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018ஆம் நிதியாண்டில் அனல் மின்சார உற்பத்திக்கான மானியமாக ரூ.7685 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. இது சோலார் மின் உற்பத்திக்கு அளித்த மானியத்தை விட அதிகமாகும்.