சென்னை:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இப்போது உள்ள 5 அடுக்கு வரிமுறையை முழுமையாக நீக்கிவிட்டு ஓர் அடுக்கு வரி முறையை அமல்படுத்துவோம் என்று ராகுல்காந்தி கூறினார்.
தற்போது இருக்கும் 5 அடுக்கு ஜிஎஸ்டி வரிமுறையால் அனைத்து வர்த்தகர்கள், தொழில் துறையினருக்கும் கடினமான ஒன்றாக உள்ளதால், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டு வருவது நிச்சயம் என்றார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு வருவது உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்றும், பணமதிப்பிழப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கும் முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கமாட்டோம் என்று கூறினார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார், அப்போது மாணவி ஒருவர் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்று கேள்வி கேட்டார்.
அவசரமான முடிவு, அவஸ்தையில் மக்கள்
மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பொதுமக்களை பாதிக்கும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன் ஒரு முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுத்துவிட்டு மக்களை அவஸ்தைப்பட விடமாட்டோம் என்றார்.
நீரவ் மோடி, மோஹூல் சோக்ஸி
கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிவிட்டு மக்களின் பணத்தை வங்கிகளின் மூலமாக பெற்றுக்கொண்ட பாஜக அரசு, அவர்களின் கூட்டாளிகளான நீரவ் மோடி, மோஹூல் சோக்ஸி போன்றவர்களுக்கு கடன் என்ற பெயரில் தாரை வார்த்துவிட்டது. இதை எல்லாம் பொதுமக்களும் மறந்துவிடவில்லை.
வேலைவாய்ப்பு எங்கே
நீரவ் மோடிக்கு வங்கிகள் 35000 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் அதன் மூலம் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாகவில்லை. அதில் 35 லட்சம் ரூபாயை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு கொடுத்திருந்தால், நீரவ் மோடியை விட அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்பீர்கள் என்று நான் பந்தயம் கட்டுகிறேன் என்று ராகுல்காந்தி சவால் விட்டார்.
மக்களுக்கே அதிகாரம்
மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையே மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். பொருளாதாரம் என்பது ஒரு நாட்டு மக்களின் மனநிலையுடன் தொடர்புடையது. அதற்காக மக்களுக்கு அதிகாரம், சமத்துவம், மகிழ்ச்சி போன்றவற்றை அளிக்கவேண்டும்.
ஜிஎஸ்டி ஒரே வரி முறை
ஜிஎஸ்டி வரி முறை கொண்டுவரப்பட்டால் மக்களின் வரிச் சுமை குறையும் என்று நம்ப வைத்துவிட்டு பாஜக அரசு 5 அடுக்குகள் கொண்ட ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வந்தது. அதில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தயாவசியப் பொருட்களுக்கு கூட கூடுதல் வரி விதிக்கப்பட்டது. வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் இந்த 5 அடுக்கு ஜிஎஸ்டி வரி முறை புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 அடுக்கு வரி முறையை நீக்கிவிட்டு அனைத்தையும் ஒன்றாக்குவோம் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார்.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
பாஜக ஆட்சியில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அதிகரித்துவிட்டது. அண்டை நாடான சீனாவில் 24 மணி நேரத்தில் 50000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 450 வேலை வாய்ப்புகள் தான் உருவாகிறது என்று அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது பாஜக அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் உள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் முன்னேற உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார்.