மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 38,095 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்ரு காலையே கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியதால் வர்த்தக நேர இறக்கத்தில் வந்த இறக்கம், சந்தையின் இறக்கமாகப் பதிவாகவில்லை.
அதே போல் நிஃப்டி காலை 11,473 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,462 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
சுமாராக கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் இண்ட்ராடே ஹைகளை விட குளோசிங் புள்ளிகள் வலுவானது என்பார்கள். அதன் அடிப்படையில் இன்ரு வர்த்தகம் 38,095-ல் சென்செக்ஸும், 11462-ல் நிஃப்டியும் வர்த்தகம் நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.
உச்சப் புள்ளி
சென்செக்ஸ் தன் வாழ்நாளில் 38,896 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது தான் மிகப் பெரிய உச்சம். ஆகஸ்டு 28, 2018 அன்று மாலை 38,896 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்த நாள் 29 ஆகஸ்டு 2018 அன்று 38,989 என கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது தான் இதுவரை சென்செக்ஸ் தொட்ட உச்சப் புள்ளி.
40,000 தொடுமா..?
இப்போது சென்செக்ஸ் போகின்ற போக்கைப் பார்த்தால் நிச்சயமாக 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாக அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். ஆக அடுத்த சில வாரங்களில் பங்குச் சந்தை பல புதிய உச்சங்களைத் தொட இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
சென்செக்ஸ் & பி.ஸ்.இ
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 14 பங்குகள் இறக்கத்திலும், 16 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,881 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,138 பங்குகள் ஏற்றத்திலும், 1,551 பங்குகள் இறக்கத்திலும், 192 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,881 பங்குகளில் 53 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 91 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 19 பங்குகள் இறக்கத்திலும், 31 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
செக்டோரியல் இண்டெக்ஸ்
ஆட்டோமொபைல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைத் தவிர மற்ற எல்லா துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் குறிப்பாக மாருதி சுஸிகி, ஹிரோ மோட்டோகார்ப் போன்ற ஆட்டோமொபைல் துறைசார்ந்த பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இறக்கப் பங்குகள்
மாருதி சுசிகி, ஹிரோ மோட்டோகார்ப், விப்ரோ, பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் இன்ஃபோடெக் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை அதிகரித்து பச்சையில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இப்போது ஐரோப்பிய சந்தைகளும் தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஆனால் ஜெர்மானிய பங்குச் சந்தை மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்தின் எஸ்.இ.டி காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்திலேயே வர்த்தகமாயின.