சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவான இட்லி என்பது தெரியும். ஆனால் இன்று உலக இட்லி தினம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்று ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு இட்லி வகைகள் வாங்குவோருக்கு பல தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.
எளிதில் செரிமானம் ஆகும் என்ற காரணத்தாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துறைக்கும் ஒரே உணவு இட்லி என்பது தமிழர்களுக்கு பெருமைதான். இட்லி தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக மாறி வருகிறது.
எந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொண்டனர். மார்ச் 30ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப விதையை நட்டவர் சென்னையில் உள்ள 'மல்லிப்பூ இட்லி' உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான்.
திரவப் பொருளை திடப்பொருளாக மாற்ற முடியுமா
நகைச்சுவையாக ஒரு செய்தியை தமிழர்கள் சொல்வதுண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். கேள்வி என்னவென்றால், திரவ நிலையில் உள்ள ஒரு பொருளை திடப் பொருளாக மாற்ற முடியுமா என்பது தான் அது.
இட்லிதான்
பேராசிரியரின் கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், இது சாத்தியமில்லாதது என்றே பதிலளித்தனர். ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர் சளைக்காமல் நிச்சயம் முடியும் என்று பதில் கூறியுள்ளார். உடனே பேராசிரியர் அது எப்படி முடியும் என்று திரும்பவும் கேள்வி கேட்டார். உடனே தமிழ்நாட்டு மாணவர், இட்லி மாவு தான் அது என்றும், திரவ நிலையில் உள்ள இட்லி மாவை சில குறிப்பிட்ட நிமிடத்திற்கு வேக வைத்தால் அது தான் இட்லி என்றும் எங்கள் விருப்ப உணவு என்றும் பதலளித்தார்.
மருத்துவர்கள் வக்காலத்து
தமிழ்நாட்டு மாணவரின் பதிலைக் கேட்டு அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இட்லி சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாது என்று மருத்துவர்களும் இட்லிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
கன்னடத்தில் வடராதனே
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பழங்கால இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
750 ஆண்டுகள் பழமையானது
பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உலக இட்லி தினம்
எந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொண்டனர். இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்டு தோறும் மார்ச் 30ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப விதையை நட்டவர் சென்னையில் உள்ள ‘மல்லிப்பூ இட்லி' உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், இட்லி தினம்
இட்லியின் மகத்துவம் பற்றி இனியவன் கூறுகையில், ‘தவழும் குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
மார்ச் 30ஆம் தேதி
இட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் தாக்கமே, ஆண்டு தோறும் மார்ச் 30ஆம் தேதி இட்லி தினமாக ஆனது என இட்லி தினத்துக்கு காரணத்தை விளக்கினார். இது குறித்து பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே. இல்லத்தரசி அம்ரிதா, ‘இட்லி தினம் என ஒன்று இருப்பது குறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன்' என்று ஆச்சர்யமாக கூறினார்.
அப்படியா எனக்கு தெரியாது
சென்னையில் உள்ள டிரைடென்ட் உணவகத்தின் பொது மேலாளர் பிரகாஷ் ஜெயதேவனுக்கும் இட்லி குறித்து தெரிந்திருக்கவிலை. ‘மார்ச் 30ஆம் தேதி இட்லி தினம் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் உணவகத்தின் மெனுவில், இட்லி வகைகள் அதிகம் சேர்க்கப்படும்' என்று சந்தோசமாக கூறினார்.
இட்லிக்கு தள்ளுபடி
இட்லி ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.யூ.ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும்போது , ‘ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு இட்லி வகைகள் வாங்குவோருக்கு பல தள்ளுபடிகளை அறிவித்துள்ளன' என்று தகவல் தெரிவிக்கிறார். ஆன்லைன் மூலமாக இட்லியை ஆர்டர் செய்வோருக்கு இட்லி ஃபேக்டரி நிறுவனம், உணவை சப்ளை செய்கிறது. தன் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் இட்லியின் விலை ஒன்று ரூ.30 முதல் ரூ.150 வரை இருக்கிறது என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
ரத்னா கஃபே சாம்பார் இட்லி
சென்னையைப் பொருத்தவரையில், சாம்பார் இட்லி என்ற உடன் மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ரத்னாகஃபே உணவகம் சாம்பார் இட்லிக்கு பெயர் போனது.
இட்லி தற்கொலை செய்யுமா
ஒரு தட்டில் இட்லியை வைத்து, இட்லி தற்கொலை செய்து மூழ்கும் வரை சாம்பாரை அதன் மீது ஊற்றி கூடவே கொஞ்சம் நெய் ஊற்றி எடுத்து சாப்பிட்டால், "ஆஹா" அந்த சுவைக்கு நம் சொத்தை எழுதி வைக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் இது வரை அந்த சுகத்தை அனுபவிக்கவில்லை என்றால் உலக இட்லி தினமான மார்ச் 30ஆம் தேதியன்று அதை அனுபவித்து பாருங்கள்,
வெரைட்டியான இட்லி வகைகள்
இட்லிகளிலும் பலவகைகளில் சமைக்க துவங்கி விட்டனர். பொடி இட்லி, கொத்து இட்லி, ரவா இட்லி, ஸ்டஃப்டு இட்லி, இட்லி ப்ரை, இட்லி சாட், இட்லி கபாப், என நாம் நினைத்துக் கூட பார்க்காத வகையிலான ஏராளான வகை இட்லி இன்று ஓட்டல்களில் விற்பனையாகிறது.
கொண்டாட்டம் கிடையாது
ரத்னா கஃபே உணவகத்தில், இட்லி தினத்தையொட்டி எந்த விதமான சிறப்புத் தள்ளுபடியும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இட்லிக்கு பெயர் போன முருகன் இட்லி கடை உணவகங்களிலும், இட்லி தினம் குறித்து எந்த கொண்டாட்டமும் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
மக்களின் விருப்பமான இட்லி
இட்லி நம்ம தமிழ்நாட்டில் மட்டும்மல்ல உலகின் பல இடங்களில் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக மாறி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மும்பை, பெங்களூரு, சென்னை, புனே ஆகிய நகரங்களில் மக்களால் ஓட்டல்களில் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்படும் உணவு எது என்றால் சந்தேகம் இல்லாமல் இடலிதான்.
உணவுகளின் மன்னன் இட்லி
இட்லியின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், கேரளாவின் பிரபல அரசியல் வாதியும், ஐ.நா சபையின் முன்னால் தூதுவரான சசி தரூர் "உணவுகளின் மன்னன் இட்லி" எனவே இட்லி தினத்தை கொண்டாடுங்கள் என்றும் தினமும் இட்லி இல்லாமல் என்னுடையா நாளை ஆரம்பிப்பதில்லை என்று நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் குறிப்பிடுகிறார்.