டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்பு கருப்பு பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக கம்பெனிகள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட 3 லட்சம் நிறுவனங்களிடம் தீவிர விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பு காலகட்டத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணப்பரிவர்த்தனைகளையும் தணிக்கைக்கு உட்படுத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை மாற்ற இந்நிறுவனங்கள் பயன்படுத்திய அனைத்து வங்கிக் கணக்குகள், டெபாசிட்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்யவும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு
பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து அறிவிப்பு வெளியிட்டது. பொது மக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள போதிய அவகாசமும் வழங்கப்பட்டது.
கருப்பு பணப்பரிமாற்றம்
மத்திய அரசு வழங்கிய கால அவகாசத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வசமிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொண்டனர். அதே போல் தொழில் துறையினரும் தங்கள் வசமிருந்த செல்லா நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொண்டனர். இதில் சந்தடி சாக்கில் உள்ளே புகுந்த போலியான நிறுவனங்களும் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தையும் வங்கிகளில் முறைகேடாக வழியில் மாற்றிக்கொண்டனர்.
3 லட்சம் போலி நிறுவனங்கள்
மத்திய அரசு கொடுத்த வாய்ப்பை முறைகேடாக பயன்படுத்தி கருப்புப் பணத்தை வங்கிகளில் மாற்றியதோடு வரி ஏய்ப்பும் செய்ததாக சுமார் 3 லட்சம் போலியான நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய கம்பெனிகள் பதிவேட்டிலிருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்(Ministry of Corporate Affairs).
வங்கிக்கணக்குகள், டெபாசிட்டுகள்
இந்திய நிறுவனங்கள் பதிவேட்டிலிருந்து 3 லட்சம் கம்பெனிகளை நீக்கி உத்தரவிட்ட CBDT, மேற்கண்ட நிறுவனங்கள் முறைகேடாக கருப்புப் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ள பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், டெபாசிட்டுகள் மற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு வேண்டுமென்றும், குறிப்பாக செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது.
கருப்பு பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தீவிர தணிக்கை
மேற்கண்ட நிறுவனங்கள், கருப்பு பணத்தை மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள், டெபாசிட்கள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பண மதிப்பு நீக்கத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளையும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பெனிகள் தீர்ப்பாயம்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது என்று தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரபூர்மாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட 3 லட்சம் நிறுவனங்கள் மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஏதுவாக, பதிவு நீக்கம் செய்யப்பட்ட 3 லட்சம் நிறுவனங்களை மீண்டும் இயங்கும் நிறுவனங்களாக மாற்ற கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் முறையிடப்படும்(National Company Law Tribunal) என மத்திய நேரடி வரிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.