டெல்லி: பைலட்களின் மொத்த சம்பள பாக்கியை கொடுக்கும் அளவிற்கு நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லாததால் நிலுவையிலுள்ள கடந்த டிசம்பர் மாத பாக்கியை மட்டுமே கொடுக்க முடியும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் நிர்வாகம் கைவிரித்து விட்டதால் ஜெட் ஏர்வேஸ் பைலட்களும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேசி இறுதி கட்ட முடிவை அறிவிக்க உள்ளனர்.
வேலை நிறுத்தம் செய்வது குறித்து பேச ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு தனது உறுப்பினர்களை டெல்லி மற்றும் மும்பைக்கு வருமாறு அழைத்துள்ளது.
நரேஷ் கோயல் அடம்
மழை விட்டாலும் இன்னும் தூறல் விடவில்லை என்று சொல்வது போல் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமான ஜெட் எர்வேஸ் நிறுவனம் இதில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டு இருந்தது. நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று அடம் பிடித்தார்.
ஊழியர்கள் போர்க்கொடி
ஒரு பக்கம் கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்க மற்றொரு பக்கம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பொறியாளர்களும் பைலட்களும் சம்பள பாக்கிக்காக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.
மோடிக்கு கடிதம்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஆயிரத்துக்கம் மேற்பட்ட பைலட்கள் உள்ளனர். இவர்கள் ஒருபடி மேலே போய் தங்களின் சம்பள பாக்கி முழுவதும் தராவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டத் தொடங்கினர். கூடவே பொறியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தங்கள் பிரச்சனையில் தலையிட வலியுறுத்தினர்.
மோடி அட்வைஸ்
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொண்ட பிரதமர் மோடியும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் பிரச்சனையைத் தீர்க்க வங்கிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் வங்கிகள் சொல்லிவைத்தது போல் நரேஷ கோயல் தலைவர் பதவியில் இருந்து விலகினால் மட்டுமே கடன் கொடுக்க முடியும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
1500 கோடி வந்தாச்சு
அனைவரும் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுக்க வேறு வழியில்லாமல் நரேஷ் கோயல் பதவி விலக ஒத்துக்கொண்டார். இதையடுத்து வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புக்கொண்டன. கடன் தாரர்கள், ஊழியர்கள் மற்றும் பைலட்களின் 4 மாத சம்பள பாக்கியை செலுத்த தேவையான 1500 கோடி ரூபாயை வங்கிகளும் வழங்கிவிட்டது.
டிசம்பர் பாக்கி மட்டுமே தரமுடியும்
வங்கிகள் கடன் தொகையை வழங்கிவிட்டதால் தங்களின் 4 மாத சம்பள பாக்கி முழுவதும் வங்துவிடும் என்ற சந்தோசத்தில் இருந்த பைலட்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் ஜெட் ஏர்வெஸ் நிர்வாகம் பைலட்களின் டிசம்பர் மாதத்திய சம்பள நிலுவையான 87.50 சதவிகித தொகையை மட்டுமே தர முடியும் என்று சொல்லி பைலட்களுக்கு அதிர்ச்சியளித்தது.
வரைவுத் திட்டம்
ஊழியர்களின் சம்பள பாக்கி முழுவதையும் செலுத்த முடியாத காரணத்தை விளக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினய் துபே, இந்திய கடன்தாரர்களின் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் மிக விரைவாக செயல்பட்டு வருகிறது.
மொத்த சம்பளம் தரமுடியாது
எதிர்காலத்தில் நிறுவனத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் எந்தவித சிக்கலும் இல்லாமல் நடத்தவும் தேவையான அனைத்து வழிகளையும் செயல்படுத்த இயக்குநர் குழு முன்வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஊழியர்கள் மற்றும் பைலட்களின் மொத்த சம்பள பாக்கியையும் தரமுடியாத இக்கட்டான நிலையில் உள்ளோம். தற்போது டிசம்பர் மாதத்திய நிலுவை பாக்கியான 87.5 சதவிகிதத்தை மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
நாங்க கோர்ட்டுக்கு போறோம்
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் இப்படித்தான் முடிவெடுக்கும் என்று தெரிந்தோ என்னவோ முன்னதாகவே 200 பைலட்கள் விடுமுறையில் செல்வதாகவும் நிலுவை சம்பள பாக்கியை பெற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
பேசி முடிவெடுப்போம்
பைலட்களின் மொத்த சம்பள பாக்கியையும் தரமுடியாது என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கைவிரித்துவிட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி கூடி விவாதிக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு (The National Aviators Guild-NAG) தங்களின் உறுப்பினர்களை மார்ச் 31ஆம் தேதியன்று டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
நாக்(NAG) கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொருத்தே ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மேல் எழும்பி பறக்குமா அல்லது முடங்குமா என்பது தெரியும்.