டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் புதிதாக பதிவு செய்ய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அளிக்கும் புதிய விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.
சமீபகாலமாக முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 3 லட்சம் நிறுவனங்களை கம்பெனிகள் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் விளைவாகவே மறைமுக வரிகள் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
புதிதாக ஜிஎஸ்டி விதிப்பில் பதிவு செய்ய வரும் விண்ணப்பங்கள், ஒருவேளை ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்கு வரி பாக்கி வைத்திருந்தால் அதையும் முழுமையாக ஆராயுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம்
வாட் வரி விதிப்பு முறையில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதால் அதை முற்றிலும் ஒழித்துவிட்டு புதிய வரிமுறையான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
1.20 கோடி
ஜிஎஸ்டி வரிமுறையில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டு இறுதி வரையிலும் சுமார் 1.20 கோடி வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டி விதிகளை சரிவர பின்பற்றாதவர்கள் மற்றும் வரிகளை ஒழுங்காக செலுத்தாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுகிறது. கூடவே அவர்களின் ஜிஎஸ்டி பதிவும் ரத்து செய்யப்படுகிறது.
மத்திய மறைமுக வரிகள் ஆணையம் நோட்டீஸ்
கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்த சில நிறுவனங்கள் முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டன. முறைகேடான பணப்பரிமாற்றம் நடந்தை கண்டுபிடித்த மத்திய மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
3 லட்சம் நிறுவனங்கள் நீக்கம்
மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸூக்கு பதில் எதுவும் அளிக்காத சுமார் 3 லட்சம் நிறுவனங்கள் கம்பெனிகள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பதற்காக கம்பெனிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அந்நிறுவனங்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்பெனிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, ஜிஎஸ்டியில் இருந்து ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் தங்களின் பழைய வரிபாக்கியை செலுத்தாமல் மீண்டும் வர்த்தகத்தை தொடர்ந்து வரி மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் வரி இழப்பு ஏற்படுத்தி உள்ளன. இது ஜிஎஸ்டி வரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
வரி ஏய்ப்பு
ஜிஎஸ்டி பதிவில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது தொடர, புதிதாக ஜிஎஸ்டியில் விண்ணப்பித்த பல நிறுவனங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்டி எண்ணை மீண்டும் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்காமல் புதிதாக ஜிஎஸ்டி எண் வேண்டி விண்ணப்பித்திருந்தன. ஒரு நிறுவனம் அதன், ‘பான்' (PAN) எனப்படும் நிரந்தர கணக்கு எண் மூலம் மட்டுமே ஒரு மாநிலத்திற்குள் ஜி.எஸ்.டி., கணக்கை துவக்க, சட்டம் அனுமதிக்கிறது.
முறைகேடான நிறுவனங்கள்
ஏற்கனவே ஜிஎஸ்டியில் பதிவு செய்திருந்து, மீண்டும் புதிய ஜிஎஸ்டி எண் வேண்டுமென்றால், அதற்கான விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவு செய்த விபரங்களை குறிப்பிட வேண்டும். ஆனால் முறைகேடான நிறுவனங்கள் அவ்வாறு குறிப்பிடாமல் புதிதாக ஜிஎஸ்டிக்கு பதிவு செய்வது போல விண்ணப்பிக்கின்றன.
சட்டப்படி நடவடிக்கை
இத்தகைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அதிகாரிகள், குறைபாடுகளை மற்றும் முறைகேடுகளை கண்டுபிடித்தால், ஜி.எஸ்.டி. பதிவை நிராகரிக்கலாம். எனவே, முழுமையாக விபரங்களை அளிக்காமல் வரும் அனைத்து விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகுந்த கவனமுடன் ஆராய்ந்து, உரிய முடிவு எடுக்க வேண்டும் என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, சட்டபூர்வ நடவடிக்கை பாய உள்ளது.