டெல்லி: 2 கோடி ரூபாய் வரையிலும் விற்று முதல் கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களின் 2018ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட ஜிஎஸ்டி படிவத்தை வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தணிக்கை அறிக்கையை வரும் ஜூன் 30ஆம் தேதி வரையிலும் தாக்கல் செய்து கொள்ள முடியும்.
செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் ஜிஎஸ்டிஆர்-9சி என்ற படிவத்தை தரவிறக்கம் செய்து தங்களின் விற்றுமுதல் மற்றும் வரி விவரத்தை தாக்கல் செய்யலாம்.
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் மாதாந்திர விற்பனை மற்றும் கொள்முதல், நிகர வரி செலுத்துதல் போன்றவற்றுக்கான படிவங்களான ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2, ஜிஎஸ்டிஆர்-3 போன்ற படிவங்களை படிப்படியாக அமல்படுத்தியது. பினனர் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தையும் அமல்படுத்தியது.
ஜிஎஸ்டியில் ஆண்டு மொத்த விற்பனை(GSTR-9), விற்றுமுதல்(GSTR-9C) மற்றும் காம்போசிசன் திட்டத்தில்(GSTR-9A) உள்ளவர்களுக்கான படிவங்களையும் கடந்த ஆண்டில் ஜிஎஸ்டி ஆணையம் அறிமுகப்படுத்தியது. கூடவே இந்த படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஎஸ்டி ஆணையம் தெரிவித்தது.
ஆண்டு விற்பனைக்கான படிவத்தை ஜிஎஸ்டி ஆணையம் அறிமுகப்படுத்தினாலும், படிவங்களை ஜிஎஸ்டி இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கான எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது அதற்கான முழு விவரத்தையும் ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும் தங்களின் ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9சி மற்றும் ஜிஎஸ்டிஆர்-9ஏ ஆகியவற்றை வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி ஆணையம் அறிவித்துள்ள தகவலின் படி ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கும் கூடுதலான விற்று முதல் (Turnover) கொண்ட தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் 2017-18ஆம் ஆண்டுக்கான முழுமையான தணிக்கை அறிக்கைக்கான ஜிஎஸ்டிஆர்-9சி படிவத்தை ஜிஎஸ்டி இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பின்னர் அந்த படிவத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
ஆண்டு விற்றுமுதல் ரூ.2 கோடிக்கு அதிகமாக உள்ள தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் 2017-18ஆம் நிதியாண்டுக்கான விற்பனை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரத்தையும் தணிக்கையாளரின் சான்றிதழ் பெற்று அதன் பின்னர் ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்து கொள்ளலாம்.
2017-18ஆம் ஆண்டுக்கான முழுமையான விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-9 (Annual return) படிவத்தையும் காம்போசிட் டீலர்களுக்கான ஜிஎஸ்டிஆர்-9ஏ படிவங்களையும் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள அனைத்து தொழில்நிறுவனங்களும் வர்த்தகர்களும் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.
ஜிஎஸ்டிஆர் படிவங்களை ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்த ஏஎம்ஆர்ஜி அன் அசோஸியேட் நிறுவனத்தின் இணை உரிமையாளர் அபிஷேக் ஜெய்ன், நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஜிஎஸ்டிஆர் படிவங்களை (GSTR-9C) தரவிறக்கம்செய்வது பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது மகிழ்ச்சி என்றார்.
தற்போது 75 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் விற்று முதல், வியாபாரக் கணக்கு (Trading accounts) லாப நட்டக்கணக்கு (Profit & Loss Accounts) மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு(Balance Sheet) ஆகியவற்றை சரி செய்து தயார் தணிக்கையாளரின் சான்றிதழ் பெற்று, தேவைப்பட்டால் மின்னணு கையொப்பம் பெற்று ஜூன் 30ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்ததார்.