மதுரை: சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கின்றனர். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை மே 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால் நகை விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவாளி, மகரசங்கராந்தி, புத்தாண்டு என நல்ல நாட்களில் தங்கம் வாங்குவது மக்களின் வாடிக்கை. அட்சய திருதியை நாளிலும் தங்கம் வாங்குவார்கள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிக அளவில் தங்கம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனை வைத்து நகைக்கடைகளில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில் ஆறு கிலோ தங்கம் விற்பனையானது.
வட இந்தியாவில் உள்ள நகைக்கடைகள் அட்சய திருதியை வியாபாரத்திற்கு தயாராகி வருகின்றன. இந்த வருடம் அட்சய திருதியை நாளில் நகை விற்பனை 10 முதல் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். தங்கம் மட்டுமல்லாது வெள்ளி, பிளாட்டினம், வைரம் என அனைத்து வகை நகைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்பது நகை விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி
தங்கத்தில் முதலீடு செய்யும் இந்தியர்கள்
இந்தியர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் மகளுக்கு சீதனமாக தங்க நகைகளை பரிசளிக்கின்றனர். தங்க நகைகளை அதிகம் விரும்புவதால் தங்கம் இறக்குமதியும் அதிகரிக்கிறது. 2018-19ஆம் நிதியாண்டில் 3280 கோடி டாலருக்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அட்சய திருதியை நம்பிக்கை
அட்சய திருதியை தினம் தங்கம் வாங்க நல்ல நாள் என்று மக்கள் கருதுவதால் அதனை விளம்பரப்படுத்தி நகைக்கடைகளும் கல்லா கட்டுகின்றன. செய்கூலி, சேதாரம் இல்லை என கூறியும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் கடைகளில் குவிகின்றனர். மக்களிடையே உள்ள நேர்மறையான நம்பிக்கை, விற்பனையாளர்களின் ஆக்ரோஷமான விளம்பரப் பிரச்சாரங்கள் போன்றவையே அன்றைய தினத்தில் கூடுதலாக நகை விற்பனையாகக் காரணம் என்பது நகைக்கடை உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.
9 ஆண்டுகளில் நகை விற்பனை
2011 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாளில் 700 கிலோ தங்கம் விற்பனை ஆன நிலையில், 2012 ஆம் ஆண்டு அதன் விற்பனை 720 கிலோவாக அதிகரித்திருந்தது. 2013ல் 1,100 கிலோவும், 2014 ஆண்டு 2000 கிலோவும் தங்கம் விற்பனையானது. 2015ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அட்சய திருதியை விற்பனை நடைபெற்றது. முதல்நாளில் 1,100 கிலோ, இரண்டாம் நாளில் 2,100 கிலோ என இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
6 ஆயிரம் கிலோ தங்கம்
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அட்சய திருதியை நாளன்று 6 ஆயிரம் கிலோ அளவு தங்கம் விற்பனையானதாகவும் சென்னை நகரில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாகவும் தங்கம் விலை உயர்வு அட்சய திருதியை தின விற்பனையை பாதிக்கவில்லை என்றும் நகை விற்பனையாளர்கள் கூறினர்.
ஜிஎஸ்டி தாக்கம்
பெங்களூருவிலும் தங்க நகைக்கடைகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 20 சதவிதம் அதிகமாக இருந்தன. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் 2017ஆம் ஆண்டு நகை விற்பனை சற்றே மந்தமாக இருந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதன் தாக்கத்தால் கடந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும் இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருக்கும் என்று நகை விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
30 சதவிகிதம் அதிகரிக்கும்
இந்த ஆண்டு மே 7ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்ட முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ளதால் திருமணத்திற்காக நகை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது நகை விற்பனையாளர்களின் கணிப்பாக உள்ளது. மக்களை கவர்வதற்காக இப்போது முதலே விளம்பரங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
பணப்புழக்கம் அதிகம்
லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்றும் நகரத்தில் வசிப்பவர்களை மட்டுமல்லாது கிராம மக்களையும் இந்த ஆண்டு அதிகம் தங்கம் வாங்க வைக்கலாம் என்றும் நகை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எது எப்படியோ கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 30 சதவிகிதம் தங்க விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் என்கின்றனர்.