டெல்லி: மீளமுடியாத கடன் பிரச்சனை, விமானங்களுக்கு வாடகை பாக்கி, ஊழியர்கள் மற்றும் பைலட்களின் சம்பளப் பிரச்சனை போன்றவற்றால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரவாதம் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி வினய் துபே தெரிவித்தார்.
கடந்த 17ஆம் தேதியுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டதைத் தொடர்ந்து அதன் ஊழிர்களும், பைலட்களம் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்கள் தங்களின் சம்பளப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாலாபக்கமும் முட்டுக்கட்டை
ரூ.8500 கோடி கடன் பாக்கி, விமானங்களுக்கு எரிபொருள் தருவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டது, விமானங்களுக்கு குத்தகை பாக்கிக்காக குத்தகை நிறுவனங்கள் விமானங்களை பறித்துக்கொண்டது, மூன்று மாதங்களாக ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் பைலட்களுக்கு சம்பளம் தரமுடியாமல் தவித்ததால் கடைசியில் கடையை மூடுவதைத் தவிரி வேறு வழியே இல்லை என்றவுடன் கடந்த 17ஆம் தேதியுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது கடையை மூடிவிட்டது.
38000 ஊழியர்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் இதில் பணியாற்றிய ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பைலட்கள் என கிட்டத்தட்ட 38000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர், தங்களுக்கு இனிமேல் நிறுவனத்தில் இருந்து சம்பளம் பைசா பெறாது என்று தெரிந்த உடன், சில பொறியாளர்கள் மற்றும் பைலட்கள் வேறு நிறுவனங்களுக்கு தாவத் தொடங்கிவிட்டனர்.
செலவுகளுக்கு திண்டாட்டம்
மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் பெரும்பாலான ஊழிர்களும் பைலட்களும் தங்களின் அன்றாட குடும்பச் செலவுகள், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது, போக்குவரத்துச் செலவு என மாதந்திர செலவுகளுக்கு திண்டாடத் தொடங்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் தங்களின் சம்பள பாக்கியை பெற்றுத்தருமாறு தொழிலாளர் ஆணையரை சந்தித்து தங்களின் பிரச்சனையில் தலையிட்டு சம்பளத்தை பெற்றத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ட்ரெய்ட்டா பிரதமர் தான்
பைலட்களும் ஊழியர்களும் அத்தோடு நில்லாமல் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் என அனைவருக்கும் கடிதம் எழுதி தங்களின் பிரச்சனையில் தலையிட்டு சம்பள பாக்கியை பெற்றுத் தர உதவ முன்வரவேண்டும் என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடிதம் அனுப்பி இருந்தனர்.
லோக்சபா தேர்தல் பிஸி
ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை பற்றி எரிந்துகொண்டிருந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் இதைப் பற்றி பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிற்கு மட்டுமே சொல்லி வந்தனர்.
ஸ்பைஸ் ஜெட்டுக்கு தாவிய பைலட்கள்
ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், இந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை காப்பாற்ற மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் முன்வந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களில் 500 பேர்களை தாங்கள் எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. இதனால் பைலட்கள் தற்காலிக நிம்மதிப் பெருமூச்ச விட்டனர்.
அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணிக்கு எடுத்துக்கொண்ட நிலையில், மீதமுள்ள அனைவரும் கடந்த சனிக்கிழமையன்று ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, மகாராஷ்டிரா நிதியமைச்சர் சுதிர் முங்கன்ட்டிவார், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலா, விமானப் போக்குவரத்துத்துறையின் நிதி அதிகாரி அமித் அகர்வால், பைலட்களின் பிரதிநிதிகள், பொறியாளர்கள் மற்றும் விமான பயணிகளின் உதவியாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் ஒட்டுமொத்தமாக படையெடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.
ஒரு மாத சம்பளமாவது வேண்டும்
நிதியமைச்சருடனான சந்திப்பின் போது ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்த ஊழியர்கள், குறைந்த பட்சம் ஒரு மாத சம்பளத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்
ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டதால் நேரடியாகவும் மறைமுகமாவும் சுமார் 38000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் அனைவரும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடங்குவதற்கும், இதில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 23000 ஊழியர்கள் மற்றும் பைலட்களின் வாழ்க்கையை காப்பாற்ற உதவ வேண்டும் என்றும் விமான பராமரிப்பு பொறியாளர் நலன் சங்கத்தினர் அருண் ஜெட்லியிடம் தனியாக கோரிக்கை விடுத்தனர்.
அனைவரும் பாதிப்பு
ஜெட்லிக்கு அளித்த கோரிக்கை மனுவில், மூடப்பட்டது விமானங்களோ, அல்லது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மட்டுமல்ல. அதையும் தாண்டி, பயணிகள், பங்குதாரர்கள், போதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக மத்தி அரசு தலையிட்டு பிரச்சனைக்க தீர்வு காண உதவ வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்தவம் தான், பார்க்கலாம்.
ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையை பொறுமையாக கேட்டறிந்த அருண் ஜெட்லி மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதால் ஊழியர்கள் சற்றே நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 38 ஆயிரம் ஊழியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா காலம்தான் பதில் சொல்லும்.