டெல்லி: இ வே பில் உருவாக்கத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரையிலும் 3626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க தற்போது இ வே பில் உருவாக்கும் நடைமுறையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இ-வே பில் உருவாக்கும் போது கட்டாயம் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இதை வரி கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது இந்த பில்லை காண்பிக்கவேண்டியது அவசியமாகும்.
புதிய திட்டத்தின் படி குறிப்பிட்ட தூரத்திற்கு சரக்கு போக்குவரத்து நடைபெற இ-வே பில் உருவாக்கப்பட்டால், குறிப்பிட்ட தூரத்தை விட கூடுதலாக 10 சதவிகித தூரத்திற்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
இ-வே பில் கட்டாயம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் சரக்கு போக்குவரத்து பரிமாற்றத்திற்கு உதவும் இ-வே பில் உருவாக்கும் நடைமுறை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. ரூ.50 ஆயிரத்திற்கு குறைவான சரக்குகளுக்கு இ-வே பில் அவசியம் கிடையாது. அதற்கும் கூடுதலான சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் உருவாக்கவேண்டியது கட்டாயமாகும். இது உள்ளூர் மற்றும் மாநிலத்திற்குள் பரிமாற்றம் செய்யவதற்கும் பொருந்தும்.
தப்பிக்க தீவிர ஆராய்ச்சி
நம் நாட்டில் புதிதாக ஒரு சட்டமோ அல்லது திட்டமோ கொண்டுவந்தால், முதலில் அந்த சட்டதிட்டத்தில் என்ன ஓட்டை இருக்கிறது, அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் அல்லது அதில் எப்படி முறைகேடு செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து தப்பிக்கும் வழியை கண்டுபிடித்துவிட்டு அதன் பிறகு தான் முறைகேட்டில் இறங்குவதுண்டு. இது காலம் காலமாக நடந்துவருவது அனைவரும் அறிந்ததே.
வரி ஏய்ப்பு ரூ.15278 கோடி
ஜிஎஸ்டி வரிமுறையில் முறைகேடு செய்யும் அனைவருமே, இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஒரே இ-பில்லை வைத்துக்கொண்டு பல முறை சரக்குகளை பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையலான காலத்தில் சுமார் 15ஆயிரத்து 278 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
இ-வே பில்லில் மாற்றம்
இ வே பில் உருவாக்கத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரையிலும் 3626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க தற்போது
இ வே பில் உருவாக்கும் நடைமுறையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பின்கோடு அவசியம்
புதிய திட்டத்தின் படி இனிமேல் இ-வே பில் உருவாக்கும்போது கட்டாயம் இ-பின் கோடு எனப்படும் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் அதில் குறிப்பிடவேண்டும். இதனால் சரக்கு போக்குவரத்து நடைபெறும் தூரம் தண்ணிச்சையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளம்போது, சரக்குகளை கொண்டு செல்வோர் அல்லது சரக்குகளை அனுப்புவோர் ஏற்கனவே குறிப்பிட்ட தூரத்தை விட கூடுதலாக 10 சதவிகித தூரத்திற்கு மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.
எல்லாமே சிஸ்டம்தான்
உதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூரு ஜெயநகருக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இ-வே பில் உருவாக்கும் போது,அஞ்சலக குறியீட்டு எண்ணான 560008ஐ பதிவு செய்யும்போது, தானாகவே தூரத்தை (350 கிமீ) கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
காலாவதியாகிவிடும்
சரக்குகளை கொண்டுசெல்லும்போது ஏற்கனவே குறிப்பிட்டுள்ள தூரத்தோடு 35 கிலோ மீட்டர்கள் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல முடியும். அத்துடன் அந்த தூரத்தை அடைவதற்கு ஆகும் கால அளவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தூரம் வரை மட்டுமே இ-வே பில் செல்லுபடியாகும். குறிப்பிட்ட தூரத்தை தாண்டும்போது இ-வே பில் தானாகவே காலாவதியாகிவிடும்.
ஒரு பில் ஒரு இ-வே பில்
புதிய இ-வே பில் உருவாக்கும் முறையினால், தூர அடிப்படையில் நடைபெரும் வரி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் முடிவுக்கு வரும் என்று ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். அத்தோடு ஒரு விலைப்பட்டியல் (Invoice) வைத்துக்கொண்டு அதன்மூலம் பல இ-வே பில்களை உருவாக்கும் நடைமுறையும் காலாவதியாகிறது. இனிமேல் ஒரு விலைப்பட்டியலை வைத்து ஒரு இ-வே பில் மட்டுமே உருவாக்க முடியும்.
முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி
இனிமேல் சரக்குகளை அனுப்பும் போது அனுப்பும் நிறுவனம் ( Seller), சரக்குகளை பெறும் நிறுவனம் ( Buyer) சரக்கை எடுத்துச் செல்லும் வாகனத்தில் எண் சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவை ஒரு விலைப்பட்டியல் எண்ணை வைத்துக்கொண்டு பல இ வே பில்களை உருவாக்குவது நிச்சயம் இயலாது என்பதால் இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்க வசதி உண்டு
மற்றொரு வசதியாக சரக்கு போக்குவரத்துப் பரிமாற்றம் நடைபெறும் போது கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் இ வே பில்லில் காலாவதி நேரத்தை நீட்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இ வே பில்லின் காலாவதி நேரம் குறித்த தகவல்களை அறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளதால் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
ஜூன் 1 முதல் அமல்
ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன்களை தொடர்ந்து 2 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், இ-வே பில்லை உருவாக்கமுடியாது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம்
(Central Board of Indirect Taxes and Customs) அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையால் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என்பதோடு சரக்கு போக்குவரத்து பரிமாற்றம் மேலும் சுலமாகும் என்று தொழில் வர்த்தகத் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.