டெல்லி: ஜிஎஸ்டி வரிமுறையில் நடைபெறும் வரி மோசடிகளை தடுக்கும் விதமாக விரைவில் மின்னணு விலைப்பட்டியல் என்னும் இ-பில் முறை அமல்படுத்தப்படும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சரக்கு பரிமாற்றத்திற்கு உதவும் இ-வே பில் முறையில் அஞ்சலக குறியீட்டு எண் குறிப்பிடவேண்டியது கட்டாயம் என்று அறிவித்தது. அதோடு தொடர்ந்து 2 மாதங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி இணையதளத்தில் இ-வே பில் உருவாக்க முடியாது என்றும் ஜிஎஸ்டி ஆணையம் அறிவித்தது.
ஜிஎஸ்டி வரி முறையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் வரி மோசடி மற்றும் முறைகேடுகளை முற்றிலும் போக்குவதற்காக ஜிஎஸ்டி ஆணையம் அடுத்தடுத்த எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வரி மோசடி, வரி முறைகேடு
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. ஆனால் அதில் இன்னமும் சிற்சில தொழில்நுட்பக் கோளாறுகளும் இருந்துகொண்டுதான் உள்ளது. இதில் உள்ள குறைபாடுகளேயே தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சில வர்த்தர்களும் தொழில் துறையினரும் வரி மோசடி மற்றும் வரி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் அதிரடி மாற்றங்கள் ஜிஎஸ்டி ஆணையமும் வரி மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகளை தடுக்க ஜிஎஸ்டி வரி முறையில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை செய்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.20000 கோடி வரி ஏய்ப்பு
கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி காலகட்டத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் இதுவரையிலும் 10000 கோடி ரூபாய் வரையலும் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
ரிட்டன் தாக்கல் செய்யமுடியாது
ஜிஎஸ்டி வரி மோசடியை முற்றிலும் தடுக்கும் விதமாக சரக்கு போக்குவரத்து பரிமாற்றத்திற்கு உதவிடும் இ-வே பில் முறையில் மாற்றம் கொண்டுவந்தது. ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்கள் தொடர்ந்து 2 மாதங்கள் ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யாவிட்டால், பின்னர் அவர்களால் ரிட்டன் தாக்கல் செய்யமுடியாது அறிவித்தது. வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பின்கோடு அவசியம்
ஜிஎஸ்டியில் மற்றொரு மாற்றமாக, இனிமேல் சரக்கு பரிமாற்றம் செய்யும் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் இ-வே பில் உருவாக்கும்போது கூடவே சரக்குகள் சென்றடையும் இடத்தின் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் (Pincode) அதில் குறிப்பிடவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதில் மற்றொரு சலுகையாக இ-வே பில்லில் குறிப்பிட்ட இடத்தைக்காட்டிலும் கூடுதலாக 10 சதவிகித
தூரத்திற்கு மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோசடியான சரக்கு பரிமாற்றம் நடப்பது தடுக்கப்படும்.
3ஆவது ஆப்பு தயார் நிலையில்
தற்போது ஜிஎஸ்டியில் மற்றொரு மாற்றமாக விலைப்பட்டியலை (GST Invoice) இணையதளத்திலேயே தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி அதிகாரிகள், ஜிஎஸ்டி இணையதளத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் குறிப்பிட்ட விற்றுமுதலுக்கும் (Turnover) கூடுதலான விற்பனை பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களின் ஒவ்வொரு விற்பனை பரிமாற்றம் (Sales
Transaction or Sales Invoice) ஜிஎஸ்டி இணையதளத்திலேயே இ.பில்லை உருவாக்கிக்கொள்ள முடியும்.
இ-பில் உருவாக்கம்
ஜிஎஸ்டியின் புதிய முறையில், குறிப்பிட்ட விற்றுமுதலுக்கு மேற்பட்ட விற்பனையில் ஈடுபட பதிவு செய்துள்ளவர்கள், தங்களின் ஒவ்வொரு விற்பனைப் பரிமாற்றத்தின் போதும் ஒரு புதிய மின்னணு விலைப்பட்டியல் (e-invoice) உருவாக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் மின்னணு விலைப்பட்டியல்கள் அனைத்தும் மாதாந்திர விற்பனைக்கான ரிட்டன்களில் எதிரொலிக்கும்.
முறைகேடு நடக்க வாய்ப்பில்லை
விற்பனைப் பரிமாற்றத்திற்கான இ-பில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், இனிமேல் போலியான விலைப்பட்டியலை தயாரித்து பின்னர் வேண்டுமென்றே அதை ரத்து செய்வது என்பது முடியாது. அதேபோல் வரி மோசடியும் தடுக்கப்படும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர். விற்பனைக்கான விலைப்பட்டியலை தனியாக தயாரிக்கும்போது எத்தனை முறைவேண்டுமானலும் மாற்றிக்கொள்ளமுடியும். ஆனால் இ-பில் முறையில் பில்லை மாற்றம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.
தனித்தனியாக மென்பொருள்
இ-பில் உருவாக்குவற்கு வர்த்தகர்களும், தொழில் துறையினரும் முதலில், தங்களின் ஆண்டு குறைந்தபட்ச விற்றுமுதலை (Turnover threshold) ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் தனியாக மென்பொருள் உருவாக்கப்படும். பின்னர் வர்த்தகர்களின் குறைந்த பட்ச விற்றுமுதலும் நிலையாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இ-பில்லை மாற்ற முடியாது
ஒவ்வொரு வர்ததகர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்ட மென்பொருள் (Software) ஜிஎஸ்டி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுவிடும். அதன்மூலம் வர்த்தகர்கள் தங்களின் இ-பில்லை உருவாக்கிக் கொள்ளமுடியும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த பட்ச விற்றுமுதலை முதலிலேயே குறிப்பிடப்பட்டு விடுவதால் விற்பனைக்கான இ-பில்லையும் மாற்ற முடியாது என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
மாதாந்திர ரிட்டன் ரொம்ப ஈசி
உதாரணமாக குறைந்த பட்ச விற்றுமுதலையும், குறைந்த பட்ச இ-பில் தொகையையும் 1000 ரூபாய் என முதலிலேயே குறிப்பிட்டுவிட்டால் அதன் பின்னர் அதை மாற்ற முடியாது. அதுபோலவே, இ-பில் உருவாக்கப்படும்போதே மாதாந்திர விற்பனைக்கான அனைத்து தரவுகளும் ஜிஎஸ்டி வரியும் தானாகவே உருவாக்கப்பட்டுவிடும். இதனால் தனியாக மாதந்திர ஜஎஸ்டி ரிட்டன்களை தயாரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைந்த கைகள்
ஜிஎஸ்டியில் இ-பில் உருவாக்கப்படும்போது கூடவே சரக்கு பரிமாற்றத்திற்கான இ-வே பில் இணையதளமான ewaybill.nic.in இணையதளத்தில் தானானவே இ-வே பில்லும் உருவாகிவிடும். இதனால் தனியாக இ-வே பில் உருவாக்கவேண்டிய அவசியமும் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வர்த்தகர்களுக்கு ரொம்ப ஈசி
இ-வே பில் உருவாக்கம் பற்றி விளக்கிய அதிகாரிகள், நாங்கள் உலகளாவிய அளவில் குறிப்பாக ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள இ-வே பில்லிங் முறையைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து அதன் பின்னரே இதை அமல்படுத்தி உள்ளோம். இதன்மூலம் அதிக அளவில் தொழில் துறையினர் தங்களின் மாதாந்திர ரிட்டன்களை எளிதாக உருவாக்க முடியும் என்று உறுதியளித்தனர்.