மதுரை: சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அனைவருமே கோடீஸ்வரர்தான். நிதியை திட்டமிட்டு சேமிக்க நிதி ஆலோசகர் அவசியம் என்கிறார் மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை முதலீடு, நிதி ஆலோசனை, முதலீட்டு ஆலோசனை போன்றவற்றை மேற்கொண்டு வரும் நிதி ஆலோசகர் சதீஷ் குமார் நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக பணத்தை சேமிக்கும் வழிமுறைகளை வழங்குகிறார்.
நாம் இப்போது இயந்திரத்தனமான வாழ்க்கையில் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்படி இருக்கவேண்டும், நம்முடைய தேவைகள் என்ன என்பதை நம்மைவிட நம்மை சுற்றி இருப்பவர்களே தீர்மானிக்கிறார்கள்.
நம்முடைய அவசியமான, அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதை தீர்மானித்து முடிவு செய்து அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். ஆனால் நாம் அப்படி இல்லாமல், நம்முடைய மனம் சொல்வதைக் கேட்டு அதற்கேற்ப விருப்பம்போல் செலவு செய்து விட்டு, பின்பு நிதானமாக உட்கார்ந்து நாம் ஏன் தேவையில்லாமல் வீணாக இந்த செலவு செய்தோம் என்று வருந்துவதால் போன பணம் திரும்ப வரப்போவதில்லை. காலம் கடந்துவிட்டது.
அநாவசிய செலவு
என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை சந்திக்கும்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் நலம் விசாரித்துவிட்டு, சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு, பின்பு அவரிடம் மிகச் சாதாரணமாக அவருடைய சம்பளம், அவர் மேற்கொள்ளும் செலவுகள், எதிர்பார்ப்புகள் என்ன?, எதிர்காலத் திட்டம் என்ன என்பதைப் பற்றி விவாதம் திரும்பியது.
பணத்தை சாப்பிட்ட செல்போன் கட்டணம்
விவாதத்தில் அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்ததுதான் நிதர்சனமான உண்மை. காரணம், அவர் தன்னுடைய மொபைல் ஃபோன் செலவுகளுக்காக மாதா மாதம் சுமார் ரூ.10000 செலவழித்துக்கொண்டிருந்தார் என்பதுதான். அப்போதெல்லாம் மொபைல் ஃபோன்களில் நாம் அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் (Incoming Call) அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கும் (SMS) கட்டணம் அதிகம் என்பது உண்மை. அதே போல் நமக்கு வரும் அழைப்புகளுக்கும் (Incoming Calls) மற்ற தொலைபேசி நிறுவன (other telecom operators) சந்தாதாரர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கும் நாம் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை இருந்தது உண்மை.
சேமிக்கும் பழக்கம்
நான் அவரிடம் நீண்ட நேரம் அறிவுரையும், செலவுகளை கட்டுப்படுத்துவது பற்றியும், நிதித் திட்டமிடல் பற்றியும் ஆலோசனை வழங்கி, மொபைல் செலவுகளுக்கு செய்யும் பணத்தில் 5000 ரூபாயை சேமிக்கும் வழியையும் எடுத்துக் கூறினேன். பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றியும் அதில் மாதா மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (Systematic Investment Plan-SIP) எடுத்துக் கூறினேன்.
எஸ்ஐபியில் முதலீடு
அவரும் நீண்ட தயக்கத்திற்கு பின்பு தான் செய்த அநாவசிய செலவுகளை உணர்ந்து, அதை தவிர்ப்பதற்காக, அரைகுறை மனதுடனே நான் சொன்னதற்காக SIPயில் ரூ.5000 முதலீடு செய்வதற்கு முன்வந்து தொடங்கிவிட்டார். 3 மாதங்கள் கழிந்தவுடன் நான் அவரை மொபைல் ஃபோனில் அழைத்து பேசி SIP முதலீடு பற்றி கேட்டேன். அதற்கு அவர் ஆனந்த ஆச்சர்யத்துடன், சார் நீங்கள் சொன்னது உண்மைதான், நான் இப்போது SIPயில் மாதந்தோறும் ரூ.5000 முதலீடு செய்து வருகிறேன். அதே போல் என்னுடைய மொபைல் ஃபோன் செலவு உட்பட அநாவசிய செலவுகளையும் குறைத்துக்கொண்டதாக கூறினார்.
வாழ்க்கையை மாற்றிய மியூச்சுவல் பண்ட்
இந்த நிகழ்வுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கை சுழற்சியை மியூச்சவல் ஃபண்ட் SIP முதலீடு அடியோடு மாற்றிவிட்டது. எஸ்ஐபி மூலம் சேமித்த தொகையில் இருந்து தனது வாழ்க்கையின் லட்சியங்களை அடைந்தார். தன்னுடைய திருமணச் செலவு, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அடிப்படை தொகை (Margin Money) என அனைத்து செலவுகளையும் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில் கிடைக்கும் தொகையில் இருந்தே செய்துகொள்கிறார்.
எஸ்ஐபி முதலீட்டால் நன்மை
SIPயின் மகத்துவத்தை அறிந்த அந்த வாடிக்கையாளர் தன்னுடைய நிதித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கும், தன்னுடைய ஓய்வு காலத்திற்கு தேவைப்படும் பணத்திற்காகவும், தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும், தற்போது மேலும் பல்வேறு SIP திட்டங்களிலும் முதலீடு செய்து வருகிறார். இந்த யதார்த்தமான உண்மையை உணர்ந்த அந்த வாடிக்கையாளர் என்னிடம் சொன்ன வார்த்தை, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதுதான்.
நிதி ஆலோசகர் ஏன் தேவை
உங்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு டாக்டரோ, ஒரு வக்கீலோ, ஒரு கணக்காளரோ என யாராவது ஒருவர் உங்களுக்கு தேவை. அதே போல் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நிதி ஆலோசகர் இருக்கவேண்டியது அவசியம். வண்டி வாகனம் வாங்கும் முன்பாகவோ, வீடு வாங்கும் முன்பாகவோ உங்களுடைய முதலீட்டு சார்ந்த திட்டங்களைத் தொடங்கும் முன்பாக உங்களின் நிதி ஆலோசகரிடம் கலந்து பேசி, அந்த நிதித்திட்டமிடல் இப்போதைக்கு அவசியமா, அதனால் என்ன பயன், அந்த செலவை செய்யாவிட்டால் என்ன நன்மை என்பதை எல்லாம் அவரிடம் விவாதித்து அதன் பின்பு சரியான முடிவை எடுங்கள்.
வாழ்க்கை வசமாகும்
நான் மேலே குறிப்பிட்ட விசயங்களை அசை போட்டு அதன் பின்பு உங்களின் நிதித் திட்டங்களை தொடங்குங்கள். வாழ்க்கை உங்கள் வசமாகும்.
நல்லதை செய்ய முடிவெடுத்தால் அதை உடனே செய்துவிட வேண்டும். நிதித் திட்டமிடல் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்: சி. சதீஸ்குமார், மொபைல்.9840189123 email: [email protected]